scorecardresearch

“மக்களை துன்புறுத்த அரசு அமையவில்லை”- மின்கட்டண உயர்வை எதிர்த்து அ.ம.மு.க ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்த மாட்டோம் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினர்.

மின்கட்டண உயர்வை எதிர்த்து அம்முக ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை எதிர்த்து அம்முக ஆர்ப்பாட்டம்

தமிழக மின்கட்டண உயர்வை எதிர்த்து சென்னை ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக அரசு சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்த மாட்டோம் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினர்.

இந்த போராட்டத்தை தலைமை தாங்கிய, அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது:

சென்ற ஆட்சி அளித்த அதிருப்தி காரணத்தால், மக்கள் திமுகவுக்கு ஆட்சியை வழங்கினர். ஆனால், அவர்களின் நம்பிக்கையை உடைக்கும் படி அரசு தற்போது நடந்து கொள்கிறது.

“பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் இருந்து போகும்போது 5 முதல் 6 லட்சம் கோடி கடன் இருந்தது. இதை ஏன் தற்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்டுகொள்ளவில்லை”, என்று கேள்வி எழுப்பினார். மேலும், “அதிமுகவின் ஆட்சியில் ஊழல் நடப்பதாகக் கூறி ஆளுநரிடம் திமுகவினர் புகார் எழுப்பினர். 

திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றனர். இதனால், தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என தெரிந்தும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வைத்து மக்களை தன்வசப் படுத்திக்கொண்டனர்”, என்று கூறினார்.

“தூக்கம் வராமல் தவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசினார். இந்த நிலைமையில், ஜெ.ஜெயலலிதா இருந்திருந்தால், அமைச்சர்களுக்கு தான் தூக்கம் வராத நிலை ஏற்படும்”, என்றார்.

மேலும், அம்முகவின் பேச்சாளர் சி.ஆர்.சரஸ்வதி பேசியபோது, “100-150 சதவீதம் வரி உயர்த்தி இருக்கிறது திமுக அரசு, இதனால் பொதுமக்கள் பெரிதாக பாதிப்பிற்கு உள்ளாவார்கள். மக்களுக்காகத் தான் அரசே தவிர, மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதற்காக இல்லை”, என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ammk protest at chennai against dmk for property tax hike