முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக கட்சியின் பொருளாளருமான வெற்றிவேல் உயிரிழந்தார்.
Advertisment
கொரோனா நோய்த் தொற்று காரணமாக, ராமச்சந்திர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மாலை 6. 40 மணியளவில் சிகிச்சைப் பலனின்று உயிரிழந்தார்.
மறைந்த வெற்றிவேல், சசிகலா அவர்களின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டவர். எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டவுடன், ஆர்.கே.நகர் தொகுதியை ஜெயலலிதாவிற்காக வெற்றிவேல்விட்டுக்கொடுத்து ராஜினாமா செய்தார். 2015 ஆர். கே நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று தான், தமிழக முதல்வராக மீண்டும் அவர் பொறுப்பேற்றார்.
Advertisment
Advertisements
அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்தியில், " கழகப்பொருளாளர் என் அருமை நண்பர் P.வெற்றிவேல் Ex.MLA மறைவு செய்தி கேட்டு கலங்கி நிற்கிறேன் – ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல் - மு. க ஸ்டாலின் :
அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்! அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
வெற்றிவேல் மறைவு மிகுந்த வேதனையை தருகிறது - எல். முருகன்: தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.P.வெற்றிவேல் மறைவு மிகுந்த வேதனையை தருகிறது. அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
துயரில் பங்கெடுக்கிறேன் - நாம் தமிழர் சீமான்: அமமுக பொருளாளர் அருமைச் சகோதரர் வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயரடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
அமமுக - அதிமுக இணைப்பு குறித்து சில நாட்களுக்கு முன்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய அவர், " அதிமுக தனது செல்வாக்கை முற்றிலும் இழந்துவிட்டது. சின்னம்மா (சசிகலா) மற்றும் தினகரன் போன்ற தலைவர்களால் மட்டுமே கட்சியை புதுப்பிக்க முடியும் … இணைப்பிற்கு முன்பாக, இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் " என்று தெரிவித்தார்.
அரசியல் களத்தில் எங்களின் நிரந்தர எதிரி திமுக தான். பாஜக அல்ல. தோல்வியை எதிர்கொண்டால் தற்போதைய அதிமுக தலைமை வீழ்ச்சியடையும். முதல்வர் வேட்பாளராக போட்டியிட அங்கு பெரிய தலைவர் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.