/indian-express-tamil/media/media_files/2025/08/19/anbil-mahesh-poyyamozhi-press-meet-trichy-ambulance-edappadi-palanisamy-campaign-tamil-news-2025-08-19-15-38-53.jpg)
"ஆம்புலன்ஸ் என்பது உயிர் காக்கக்கூடியது அதனுடைய முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கக் கூடாது." என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க கூட்டம், மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அவைத் தலைவர் என். கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது:-
தமிழக பள்ளி கல்வி துறை நலிவடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் பல தொழில்நுட்பங்களை கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது. தமிழக மாணவர்கள் உலக அளவில் சாதனை புரிந்து வருகிறார்கள. தமிழகத்தில் தொடக்க கல்வி அளவில் இடைநிற்றல் இல்லாத நிலை தான் நிலைமை வருகிறது.
மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய அளவில் இடைநிற்றல் சதவீதம் 14 சதவீதமாக உள்ளது ஆனால் தமிழகத்தில் இடைநிற்றல் 7.7 சதவீதமாக குறைத்துள்ளோம். மாநில கல்வி கொள்கையை பொறுத்தவரை அனைவருக்குமான கல்வியை கொண்டு சேர்த்துள்ளோம். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி துறையில் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் செயல்பட்டு வருகிறோம். பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு செயல்பாடுகளை செய்துவருகிறோம்.
பள்ளி கட்டிடங்களை சீரமைத்து வருகிறோம் பள்ளி கட்டிடங்கள் இல்லாத இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது இப்படி இருக்க கூடிய நிலையில் எதை வைத்து அன்புமணி ராமதாஸ் பள்ளிக்கல்வித்துறை நலிவடைந்துள்ளதாக கூறுகிறார் என்பது தெரியவில்லை, அதை அவர் விளக்க வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. காலை உணவு திட்டத்தை குடியரசுத் தலைவர் பாராட்டியுள்ளார்.
அரசியல் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்திற்காக ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க மறுத்து வரும் நிலையில், அதற்காகத்தான் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுமே தவிர நம் தலையில் நாமே மண்ணள்ளி போட்டுக்கொள்ளும் வகையில் அன்புமணி ராமதாஸ் பள்ளிக்கல்வித்துறை நலிவடைந்துள்ளது என்கிற கருத்தை கூறக்கூடாது.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் கல்வி சார்ந்து விமர்சனங்களை வைக்கும்போது அதில் உண்மைத்தன்மை இருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்போம். நாங்கள் பள்ளிக்கல்வித்துறை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வைக்கும் விமர்சனங்களையும் கண்டனங்கள் குறித்தும் எங்களுடைய ஆய்வுக்கூட்டங்களில் விவாதிப்போம், தவறு இருந்தால் நிச்சயமாக அதை திருத்திக் கொள்வோம். பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை தொடர்ந்து பல்வேறு முறைகளில் வழங்கி வருகிறோம்.
ஆம்புலன்ஸ் என்பது உயிர் காக்கக்கூடியது அதனுடைய முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கக் கூடாது. அவர் பிரச்சாரக் கூட்டத்தில் நாங்கள் ஏன் ஆம்புலன்ஸை அனுப்பி வைக்கப் போகிறோம். முன்னாள் முதல்வராக இருந்தவர் இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் மாநகர செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், கே. என். சேகரன், சபியுல்லா, மாவட்ட நிர்வாகி கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், குணசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் கார்த்தி, லீலாவேலு, நீலமேகம், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.