அன்பில் மகேஷ் வெற்றியில் இவருக்கு பங்கு உண்டு: திருச்சி பிரமுகரை புகழ்ந்த உதயநிதி
திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ கே என் சேகரன் இல்ல திருமண விழாவில் அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின், கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ கே என் சேகரன் இல்ல திருமண விழாவில் அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின், கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Advertisment
திருவெறும்பூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே என் சேகரன் - சித்ரா (எ) நவமணி இவர்களின் மகளும் திருவெறும்பூர் திமுக பகுதி செயலாளரும் 40-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலருமான எஸ் சிவக்குமாரின் சகோதரியுமான எஸ்.நந்தினி
என்பவருக்கும், திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.முருகேசன் மகள் கல்யாணசுந்தரி-சுந்தரராஜன் தம்பதியரின் மகனுமான எஸ்.பாலஆனந்த் ஆகியோருக்கும் திருமணம் திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நேற்று நடந்தது. அதன் வரவேற்பு விழா திருவெறும்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது;
திருவெறும்பூர் பகுதியில் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏவான சேகரன் சிறப்பாக செயல்பட்டார். அதற்கு உதாரணமாக நவல்பட்டு அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் வீட்டு வசதி வாரியத்திடம் இடம் வாங்கி வீடு கட்டியவர்களுக்கு உரிய பட்டா வீட்டுவசதி வாரியத்திடம் இருந்தது. அதனை கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது கலைஞரின் வழியில் வீட்டின் உரிமையாளர்களுக்கு பெற்றுத் தந்தார்.
அதைப் போல திருவெறும்பூரில் காவேரி குடிநீர் திட்டத்தை பெற்று தந்தவர். 2016 திருவெறும்பூரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றிக்காக பாடுபட்டதோடு அவரை தன்னைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தவர்.
2016 திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் தான் நான் பிரச்சாரத்திற்கு வந்தேன். திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி அன்று தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கும் இன்று அமைச்சர் ஆனதற்கும் முக்கிய பங்கு கே.என். சேகரனுக்கு உண்டு என்று கூறி மணமக்களை வாழ்த்தினார்.
திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது;
2016 ஆம் ஆண்டு தேர்தலில் நின்ற பொழுது நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். அப்பொழுது மக்களுக்காக போராட்டம், ஆர்ப்பாட்டம் என நடத்துவதற்கு எப்படி என கற்றுக் கொடுத்தவர் சேகரன். மேலும், போராட்டம் நடத்தும் பொழுது காவல்துறை நண்பர்கள் கைது செய்ய முற்படும்பொழுது கைது செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்.
நேற்றைய உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது . அவரை பார்த்த பொழுது கலைஞரே பேண்ட் சர்ட் போட்டு வந்து பேசினால் எப்படி இருக்குமோ அப்படி அவரது பேச்சு இருந்தது.
மேலும் இந்த மணமக்களை கலைஞர் தமிழக முதல்வர் நேரில் வந்து வாழ்த்துவது போல் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் வந்து வாழ்த்தியுள்ளார் என்றார்.
இந்த விழாவில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என். நேரு, கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், இனிக்கோ இருதயராஜ், சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி மாவட்ட செயலாளர் வைரமணி, தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர், திருச்சி எம்பி திருநாவுக்கரசர், திருச்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, திருச்சி மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவருமான கருணாநிதி, திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், கூத்தைப்பார் பேரூராட்சி செயலாளர் தங்கவேல், பேரூராட்சி தலைவர் செல்வராஜ், துணை தலைவர் பழனியாண்டி, நகராட்சி தலைவர் காயம்பு, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், பழனியப்பன், ரமேஷ், உட்பட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“