/indian-express-tamil/media/media_files/2025/08/06/anbil-mahesh-2025-08-06-23-09-45.jpg)
Anbil Mahesh
தமிழகம் முழுவதும் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் உள்ள கே.கே.நகர் அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளியின் திறப்பு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, பள்ளியைத் திறந்து வைத்தார்.
பள்ளியின் திறப்பு விழாவுக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் டெட் (TET) தேர்வு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிப் பேசினார்.
"தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தவுடன், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுப்போம். ஆசிரியர் சங்கங்களும் இந்தத் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. ஒருபோதும் தமிழக அரசு ஆசிரியர்களைக் கைவிடாது," என்று அவர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் மலர்விழிராஜேந்திரன், பொற்கொடி, பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் ராணி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு:
கட்டாய உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ள ஆசிரியர்கள், இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற வேண்டும். அவர்கள் ஓய்வு பெற்றதாகக் கருதப்பட்டு, ஓய்வூதியப் பலன்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.