வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவோம் என்கிற ரீதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. இது தொடர்பாக அன்புமணி மீது வழக்குப் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
பாமக இளைஞரணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான டாக்டர் அன்புமணி மீண்டும் தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். பாமக.வின் இதர வேட்பாளர்களுக்கும், அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கும் அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரில் அதிமுக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதை உணர்த்துவது போல அவர் பேசிதாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
அன்புமணி பேசியது இதுதான்... ‘இந்த பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி கிடையாது. திமுகவுக்கு மட்டும் கொஞ்சம் வாக்கு வங்கி உள்ளது. சரி, அப்ப தேர்தல்ல என்ன நடக்கும்? பூத்ல என்ன நடக்கும்? நம்மதான் இருப்போம் பூத்துல... சொல்றது புரியுதா இல்லையா? (தொண்டர்கள் கைத்தட்டல்). நம்மதான் இருப்போம்... நம்மதான் இருப்போம். அப்புறம் என்ன? சொல்லணுமா வெளில. புரிஞ்சுகிட்டீங்கள்ல.’ என பேசினார் அன்புமணி.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வாகுச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அன்புமணி ராமதாஸ் இந்த கருத்தை தெரிவித்ததாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார்.