Advertisment

விக்கிரவாண்டியில் வேட்டி, சேலை பறிமுதல்: தி.மு.க வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தும் அன்புமணி

ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க தி.மு.க-வினர் வைத்திருந்த வேட்டி - சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க-வை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Anbumani Ramadoss Disqualify DMK candidate in Vikravandi bypoll Tamil News

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த வேஷ்டி, சட்டை சேலைகளை தேர்தல் படையினர் கைப்பற்றினர்.

பாபு ராஜேந்திரன் - விழுப்புரம்

Advertisment

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வருகிற 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ஆம் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடவில்லை என அறிவித்ததால் தி.மு.க, பாமக மற்றும் நாம் தமிழர் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

இந்த  இடைத்தேர்தலை ஒட்டி ஆளும் தி.மு.க-வும், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியும் மாறி மாறி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு அமைச்சர்கள் முகாமிட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அதேபோன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சௌமியா, அவரது மகள் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, நேற்று தி.மு.க சீனியர் அமைச்சர் துரைமுருகன் யார் யாருக்கு எந்தெந்த தொழில் தெரியுமோ இந்த தொழிலை அவர்கள் செய்கிறார்கள் என கூறிவிட்டுச் சென்றது, பா.ம.க கட்சியினரிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில், விக்கிரவாண்டி அருகே ஆசாரகுப்பத்தில், தி.மு.க சார்பில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு வைத்திருந்த 500 புடவை, வேட்டிகளை பா.ம.க-வினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை சாலையில் எடுத்து வீசியதால், அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. மேலும், இதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். இந்த விவகாரம் பற்றி போலீசார் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்

அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க தி.மு.க-வினர் வைத்திருந்த வேட்டி - சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க-வை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள  விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில்,  திமுக கிளை செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான  ஏ.சி. இராமலிங்கம் என்பவரின்  வீட்டில் வைத்து,  கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளால்  வாக்காளர்களுக்கு கையூட்டாக வழங்கப்பட்டு வந்த   வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர்  கைப்பற்றி  அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.  தேர்தல் விதிகளை மீறிய திமுகவினரின் இந்த சட்டவிரோத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தேர்தல் விதிகளை சற்றும் மதிக்காமல் திமுகவினர் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை கையூட்டாக வழங்கியதைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   தேர்தல் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்து வரவழைத்தனர். ராமலிங்கத்தின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள  பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால்,  தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக  வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  வேட்டி - சேலைகளை  திமுகவினர் கொல்லைப்புறம் வழியாக எடுத்துச் செல்ல உதவி செய்துள்ளனர்.

திமுகவின் மக்கள்விரோத செயல்பாடுகளுக்கு எதிராக ஓட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கொந்தளித்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் மக்களின் கோபத்தை நன்றாக பார்க்க முடிகிறது. இதனால் விக்கிரவாண்டி  தொகுதியில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கும் திமுக, அரசு எந்திரத்தின் உதவியுடன் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கவும்,  தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கவும் முயல்கிறது.  இதற்கு தமிழக அரசு அதிகாரிகள் துணை போவது கண்டிக்கத்தக்கது.

விக்கிரவாண்டி தொகுதியில்  இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்பினால், தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த  இ.ஆ.ப அதிகாரி ஒருவரை  நியமிக்க வேண்டும். சிறப்பு பார்வையாளர்களை அதிக எண்ணிக்கையில் அமர்த்த வேண்டும். மத்திய துணை இராணுவப் படையினரை அதிக எண்ணிக்கையில்  நிறுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததற்காக திமுக வேட்பாளரை தகுதி நீக்கம்  செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vikravandi Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment