பா.ஜ.க. கூட்டணிக்காக அன்புமணியும், சவுமியாவும் தன்னிடம் கெஞ்சியதாக ராமதாஸ் கூறியிருந்த நிலையில் அன்புமணி இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
பாமக சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது; ‘கடந்த 5 ஆண்டுகளாகவே பாமக நிறுவனர் ராமதாஸ் அவராகவே இல்லை. ராமதாசாக இருந்து எது கூறியிருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். ராமதாசுக்கு பிறகு நான் தலைவராக வேண்டும் என அப்போதே முடிவெடுத்துவிட்டேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு ராமதாஸ் கூறினார். ராமதாஸ் சொல்லித்தான் 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணி வேண்டாம் என சொல்லப் போகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது காங்கிரஸ் கட்சிக்கும், விசிகவுக்கும் திடீர் பாசம் ஏன்? என்றைக்குமே ராமதாசை பற்றி புகழ்ந்து பேசாத திருமாவளவன், தற்போது பேசுவது ஏன்? வி.சி.க.வின் வன்னிஅரசு, ரவிக்குமார், சிந்தனைச்செல்வனுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. 3 பேர் தங்களது சுய லாபத்துக்காக ராமதாசை பயன்படுத்தி கொள்கிறார்கள். வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தையாக மாறி விட்டார்.’ இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்தில் ராமதாஸ் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பிடிக்கவில்லை என்று கூறி அவரை பாராட்டி பேசியிருந்தார். இதற்காக விசிக எம்பி ரவிக்குமார், ராமதாஸ்-க்கு நன்றி கூறி இருந்தார்.
திருமாவளவன் இதுகுறித்து அளித்த பேட்டியில், "ஆரம்ப காலகட்டத்திலிருந்தே ராமதாஸ் அவர்கள் என் மீது பாசம் கொண்டவர்தான். என் மீதான அவரது அக்கறை உண்மையானதுதான்" என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார். இது கூட்டணி பற்றிய சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.