தமிழ்நாட்டில் வன்னியர் மற்றும் தலித் சமூகத்தினர் 40 விழுக்காடு உள்ளனர். இரண்டு சமூகமும் பின் தங்கியுள்ளது. இரண்டு சமூகமும் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து முதல்வரை இன்று சந்தித்தோம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சீர் மரபினருக்கு 2.5, இதர பிறப்பிக்கப்பட்டோருக்கு 7 விழுக்காடு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மீண்டும் உருவாக்கியது. வன்னியர் உள் இடஒதுக்கீடு தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதையும் படியுங்கள்: கோவில் சிலைகளை கண் போல பாதுகாப்பது அரசின் கடமை – முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேல்
அதன்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூன்று மாதத்தில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை சேகரித்து தமிழக அரசுக்கு பரிந்துரையாக வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதை விரைவுபடுத்தி இந்தக் கல்வியாண்டுக்குள் வன்னியர் உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்டில் வன்னியர் மற்றும் தலித் சமூகத்தினர் 40 விழுக்காடு உள்ளனர். இரண்டு சமூகமும் பின் தங்கியுள்ளது. இரண்டு சமூகமும் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும். வன்னியர் தனி இட ஒதுக்கீட்டால் பிற சமூகங்களுக்கு பாதிப்பு கிடையாது, சீர் மரபினர் உட்பட யாருக்கும் எதிரானது கிடையாது.
சென்னை உயர்நீதிமன்றம் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு தடை விதித்தபோது 7 காரணங்களை சொன்னது. அதில் 6 காரணங்கள் தவறு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை சரிபார்த்து, இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற காரணம் மட்டுமே சரியானது.
சாதிவாரியாக அனைத்து சமூகத்தினரும் அரசுப் பணிகளில் எத்தனை விழுக்காடு இருக்கிறார்கள் என்ற தரவுகள் தனிப்பட்ட முறையில் எங்களுக்குக் கிடைக்காது. ஆனால் தமிழக அரசு நினைத்தால் ஒரு சில நாட்களுக்குள் அந்த தரவுகளை எடுத்து விடலாம். அ.தி.மு.க முறையாகவே வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றியது. வன்னியர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு விழா நிகழ்ச்சி நடத்துவது குறித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். காவல்துறை அனுமதி வழங்கினால் சித்திரை முழு நிலவு விழா நடைபெறும். நாடகக் காதல் தொடர்பாக இப்போது நான் பேச விரும்பவில்லை.
மேலும், தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம், அரியலூர் பாசனத் திட்டம் ஆகியவற்றை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
மேலும், தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. தமிழக அரசு மாதம் ஒருமுறை இதுகுறித்து ஆய்வு செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil