கோவை நீலாம்பூர் பகுதியில் 'சங்கமித்ரா பண்ணை' என்ற பெயரில் ஒட்டகப் பால் கடை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் ஒட்டகங்கள், குதிரைகள் உட்பட பல்வேறு விலங்குகளும், பறவைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சங்கமித்ரா பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகள் மோசமான நிலையில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக இந்திய விலங்குகள் நல வாரியத்திற்கு புகார் சென்றுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த கோவை கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அங்குள்ள சில விலங்குகள் மோசமான நிலையில் வைக்கப்பட்டிருந்ததை அறிந்தனர். இதில் 2 ஒட்டகங்கள், 4 குதிரைகள், 2 கழுதைகள், 1 நாய் மற்றும் 2 நாய் குட்டிகள் பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் பண்ணை உரிமையாளர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில் 3 ஒட்டகங்கள் காணாமல் போனதும், 1 ஒட்டகம் முறையாக பராமரிக்கப்படாமல் உயிரிழந்ததும் தெரிய வந்தது.
மேலும் பண்ணையில் சிலர் ஒட்டகங்களை தாக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியான நிலையிலும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதிகாரிகள் பண்ணையிலிருந்து கால்நடைகளை மீட்டு 2 ஒட்டகங்களை சென்னையில் உள்ள பீப்பிள் பார் அலிமல்ஸ் வளாகத்திற்கும், இதர விலங்குகளை தன்னார்வலர்கள் விலங்குகள் பராமரிப்பு இடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“