Chennai Accident: சென்னையில் நேற்று நடந்த இரு சக்கர வாகன விபத்தால், நகரமே பரபரப்பானது.
சென்னை, நந்தனத்தில் ஒரே பைக்கில் வந்த 3 பேர் மீது மாநகர பேருந்து மோதியதால், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அண்ணாசாலையின் முக்கியப் பகுதியான நந்தனத்தில் ட்ராஃபிக் நேரமான காலை வேளையில், மாநகர பேருந்துக்கும் வேறொரு இரு சக்கர வாகனத்துக்கும் இடையே பெண்கள் ஓட்டி வந்த வாகனம் புகுந்ததால் திடீரென விபத்து ஏற்பட்டது.
சென்னை, கிழக்கு தாம்பரத்தில் இருந்து ஏ51 என்ற மாநகர பஸ் ஒன்று பிராட்வே நோக்கி நேற்று காலை அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வேளச்சேரியில் இருந்து எழும்பூர் நோக்கி பைக்கில் இரண்டு பெண்களை ஏற்றி கொண்டு இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். காலை நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு செல்பவர்களின் வாகனங்கள் அண்ணாசாலையில் அதிக அளவில் சென்று கொண்டிருந்தன. நந்தனம் மசூதி அருகே செல்லும் போது ஆட்டோ ஒன்று சர்வீஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி வந்தது. இதை கவனித்த பைக்கில் சென்ற ஒருவர் தனது வேகத்தை குறைத்தார்.
அப்போது இரண்டு பெண்களுடன் வந்த வாலிபரின் பைக் மற்றொரு பைக் மீது மோதி நிலை தடுமாறியது. இதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக பிராட்வே நோக்கி வேகமாக வந்த மாநகர பஸ் மூன்று பேர் சென்ற பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பைக்கில் சென்ற மூன்று பேரும் நடுரோட்டில் கீழே விழுந்தனர். அப்போது, 2 பெண்களின் மீது மாநகர பஸ் ஏறி இறங்கியது.
இதனால் பெண்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பைக் ஓட்டி வந்த இளைஞர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அங்கு விரைந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இறந்த 2 பெண்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த விசாரணையில், பைக்கை ஓட்டி வந்த இளைஞர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த சிவா(23) என்றும், இவருடன் வந்த பெண்கள் அதே ஊரைச் சேர்ந்த பவானி(22) மற்றும் மகாலட்சுமி(21) எனவும் தெரியவந்தது. அதோடு இவர்கள் இருவரும் இன்ஜினியர்களும் கூட. சென்னை வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி கடந்த 4 மாதங்களாக எழும்பூரில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் இவர்கள் வேலை செய்து வந்திருக்கிறார்கள். படுகாயமடைந்த சிவாவும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மூன்று பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் நேற்று காலை ஒரே பைக்கில் வேளச்சேரியில் இருந்து அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஒரே பைக்கில் மூன்று பேர் பயணம் செய்ததால் பைக் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து நடந்ததாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவா ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய மாநகர பஸ் ஓட்டுனர் குணசேகரன்(41) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனால் அண்ணாசாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.