சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாணவரை தாக்கி, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கடந்த 25-ம் தேதி கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தி.மு.க அரசு பெண்களை பாதுகாக்க தவறி விட்டது என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலையில் ஞானசேகரன் மனைவி பணி புரிந்தாரா என்பது குறித்தான கேள்விக்கு காவல் ஆணையர், உயர்கல்வித் துறை அமைச்சர் முரண்பட்ட கருத்து தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அருண் இந்த வழக்கு குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, ஞானசேகரைன் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அந்த மாதிரி எந்த தகவலும் கிடையாது” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து இன்று (டிச.27) அண்ணா பல்கலைக்கழகத்தில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் (POSH) கமிட்டியில் இருந்து அப்படிப்பட்ட புகார் வரவில்லை என்பது தான் எங்களுக்கு கிடைத்த சங்கடமான செய்தி. ஒரு வேளை, மனுதாரர் அந்த புகார் தராமல் இருந்து அந்த குழுவுக்கு யார் மூலமாகவோ செய்தியாக வந்திருந்தால் கூட அழைத்துப் பேசி நாங்கள் தீர்வு காண வாய்ப்பு இருந்திருக்கும்.
காவல்துறைக்கு புகார் மனு சென்ற பிறகு, பல்கலைக்கழகம் அதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறது. துறையின் அமைச்சர் என்ற முறையில், நானும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன். கைது செய்யப்பட்டிருக்கிறது, விசாரணை தொடர்கிறது.
சிசிடிவி கேமரா நுழைவு வாயிலிலும், மாணவர் - மாணவியர் விடுதியிலும், தங்கி சாப்பிடக் கூடிய உணவகத்திலும், சாலைகளிலும் பெரும்பாலும் பொருத்தப்பட்டு 100க்கு 80 சதவீதம் சரிவர தான் இருக்கிறது.10,20 குறைபாடுகள் உண்டு. அந்த தவறு இடத்திற்குள் சிசிடிவி கேமரா இல்லை தான்.
சம்பவம் நடந்த நேரம் 8 மணி. குற்றவாளியான அந்த நபர், பல்கலைக்கழகத்துக்கு அடிக்கடி வந்துபோகும் பழக்கத்தையும் பெற்றிருக்கிறார். இதை வாயில் காவலர்களும் சொல்லி இருக்கிறார்கள். முழு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரது மனைவி கூட, அந்த பல்கலைக்கழகத்தில் பணி நிரந்தரமில்லாத பணியில் ஆற்றிக் கொண்டிருப்பார். வருவார்கள், போவார்கள் என்ற நிலையில் தான் சந்தேகப்பட்டு இவரை உள்ளே வராதே என்று சொல்லுகிற சூழல் இல்லாத நிலை இருந்திருக்கிறது” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.