2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3 ஆம் நாள் கூட்டம் இன்று (ஜன.8) நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் கட்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு பேச வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக் விவகாரத்தில், பல்கலைக்கழக வேந்தராக உள்ள ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“யார் அந்த சார்? என்பதற்கும் ஆளுநர் வாய் திறக்கவில்லை. பெண்ணின் விவரங்கள் வெளியானதற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ள ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகம் கடந்த 2 வாரங்களில் போராட்ட களமாக மாறியுள்ளது. காவல்துறையும், முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டும்” என்று பேசியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் போரட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அதன்படி ஆளுங்கட்சியினராக இருந்தாலும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் சில அரசியல் கட்சியினர் இந்த அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசினர். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என பாஜக எம்.எல். ஏ காந்தி கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகமும் முடங்கி கிடப்பதற்கு ஆளுநர் ரவி தான் காரணம் என்று சட்டசபையில் விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் பேசினார்.
பின்னர் பேசிய கொங்கு ஈஸ்வரன், ஞானசேகரனிடம் போனில் பேசியவர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
குற்றவாளியின் பின்னனியில் யார் உள்ளார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று பா.ம.க எம்.எல். ஜி.கே மணி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“