அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (டிச 27) தாமாக முன்வந்து விசாரித்தது. இன்றைய தினமும் இந்த வழக்கின் விசாரணை நடைபெறுகிறது.
நீதிபதிகள் சுப்ரமணியன் மற்றும் லட்சுமி நாராயணன் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். முதலில் அரசு தரப்பு வாதங்கள், காவல்துறை தரப்பு விளக்கங்கள் முழுவதுமாக அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம், தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
அதன்படி, "துரதிர்ஷ்டமான இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம் தான் பல்கலைக்கழக நிர்வாகம் துணை நிற்கும். 189 ஏக்கர் பரப்பளவு கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 8 வழிகள் உள்ளன. இந்த அனைத்து வழிகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளட்து.
பல்கலைக்கழகத்தில் 988 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அதில் 849 கேமராக்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. மாதந்தோறும் கேமராக்கள் குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் முழுமையாக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் தனது படிப்பை தொடர்வார். காவல்துறை விசாரணைக்கு பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.