சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததையடுத்து இதற்கு பல அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் விபரங்கள் இருந்த FIR நகல் இணையதளங்களில் பரவியுள்ளது. போக்சோ சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடக்கூடாது. அப்படி சட்டத்தை மீறி வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், தற்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட மாணவியின் விபரங்கள் எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதன் நகல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனது பெயரைத் தெரிவிக்க சென்னை காவல்துறை 6 மணி நேரம் எடுத்துக்கொண்டது. அதாவது 11 மணியளவில் கைது செய்து மாலை 5 மணிக்குத்தான் அந்த நபரது விபரங்கள் வெளியிடப்பட்டன.
ஆனால், தற்போது இணையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்கள் ஒரே நாளில் கசிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களை ஒரே நாளில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் அந்த எஃப்.ஐ.ஆரில், “நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து டிசி தர வைப்பேன் என மிரட்டினான். செல்போனில் இருந்த எனது தந்தையின் எண்ணை எடுத்துக்கொண்டு அவருக்கு வீடியோ அனுப்புவேன் என மிரட்டினான்.
நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் எங்களை விடுவதாக இல்லை. அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தான்” என்று அந்த மாணவி கூறியதும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாத வழக்குகள் பல இருக்கும் நிலையில், இந்த வழக்கில் ஏன் இத்தனை அவசரம் என கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் இதுகுறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, “அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பான எப்ஐஆர் கசிவு உரிமைகளுக்கு எதிரானது. குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால். பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியே கசிந்தது.
பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து திமுக தவறியிருக்கிறது. மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசு மற்றும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சருக்கு கண்டனம்” தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட எஃப்.ஐ.ஆர் விவரங்களை யாரும் பார்க்கவோ, ரவிறக்கம் செய்ய முடியாதபடி முடக்கம் செய்துள்ளது. மாணவியின் முழு விவரங்களுடன் ஆன்லைனில் எஃப்.ஐ.ஆர் வெளியானது சர்ச்சையான நிலையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.