சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21 ஆம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.
அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்டு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது. அந்த குழுவில் அண்ணாநகர் துணை கமிஷனர் சினேகாபிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐமன் ஜமால், சேலம் மாநகர துணை கமிஷனர் பிருந்தா ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இந்த விசாரணை குழு தனது விசாரணையை விரைவில் தொடங்க உள்ளது.
கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள், குற்றவாளியின் வாக்குமூலம், புகார் அளித்த மாணவியின் வாக்குமூலம் உள்ளிட்ட விவரங்களை 3 ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரணை குழுவிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும், தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து மாணவி பாலியல் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அதற்கான விசாரணையை இன்று தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர்கள் தொடங்குகின்றனர்.
இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் வந்தனர். பிறகு இன்று காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களான மம்தா குமாரி, பிரவின் சிவானிடோ ஆகியோர், பாதிக்கப்பட்ட மாணவி, அண்ணாபல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவினரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தையும் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அத்துடன் விசாரணை அதிகாரியான அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் குற்றவாளியை கைது செய்த போலீசார் குழுவினரிடமும் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர்கள் விசாரணை நடத்த உள்ளனர்