அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு 30 ஆண்டு ஆயுள்- ஸ்டாலின், தலைவர்கள் வரவேற்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு மே 28 அன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜூன் 2) சென்னை மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடுங்காவல் ஆயுள் தண்டனையுடன், ₹90 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தமிழக அரசியல் தலைவர்கள் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு மே 28 அன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜூன் 2) சென்னை மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடுங்காவல் ஆயுள் தண்டனையுடன், ₹90 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தமிழக அரசியல் தலைவர்கள் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Anna University sexual assault case

Anna University sexual assault case

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இன்று (ஜூன் 2, 2025) இந்த வழக்கில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த மே 28 அன்று குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி, 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பின்றி ஆயுள் தண்டனையுடன், ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisment

இந்த வழக்கில், ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. நீதியின் தாமதம் இல்லாமல், துரிதமாக நடத்தப்பட்ட இந்த வழக்கில், வெறும் ஐந்தே மாதங்களில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் தீவிர அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது.

இந்தத் தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

Advertisment
Advertisements

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் போலீசார் செயலால் பதில் அளித்து உள்ளனர். விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.

தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் போலீசார் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளனர் என மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன்.

எடப்பாடி பழனிச்சாமி

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசு.

அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான தி.மு.க., அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அ.தி.மு.க., தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றி வருகிறோம்.

அதனால் தான் யார் அந்த SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம். FIRல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது தி.மு.க., அரசு?

SIRஐ காப்பாற்றியது யார்? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது.

அமைச்சர், கீதா ஜீவன்

பெண்களை இழிவாக கருதும் சமூக விரோதிகளுக்கு, ஞானசேகருக்கு அளிக்கப்பட்ட 30 ஆண்டுக்கால சிறை தண்டனை மூலம் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விரைவான நடவடிக்கைக்கு கிடைத்த தீர்ப்பாகும் .இதன் மூலம் பெண்கள் இனிமேல் தைரியமாக புகார் தெரிவிக்க வருவார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியிடம் காட்டுமிரண்டித்தனமாக நடந்து கொண்ட பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு குறைப்பு இல்லாத 30 ஆண்டுகள் ஆயள் தண்டனையுடன், ரூபாய் 90 ஆயிரம் அபராதம் வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதியின் தீர்ப்பை தமிழக காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையானது, பெண்கள் சமூகத்தில் பாதுகாப்பாக உணரவும், வன்கொடுமைகள் இல்லாத சமூகமாக உருவாக காரணமாகவும் அமையும். குற்றம்சாட்டப்பட்ட 5 மாதத்திற்குள் விரைந்து விசாரணை செய்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களையும் பாராட்டுகிறேன்.

அன்புமணி ராமதாஸ்


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது. மேல்முறையீட்டில் தப்பாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.

அவர்களை பாதுகாக்கும் செயல்களில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது. அவர்கள் யார் ? என்பதைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழிசை சவுந்தரராஜன்

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கி இருக்க வேண்டும். ஞானசேகரன் குற்றம் செய்ய சம்பவத்திற்கு பின்னணி என்ன? யார் அந்த சார் என்பதற்கு பதில் தெரியவில்லை.

டிடிவி தினகரன்

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது.

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த தண்டனை, தமிழகப் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், ஆட்சிப்பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் அன்றாடம் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு வகையில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”, என்று தெரிவித்துள்ளார். 

 

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: