அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் தி.மு.க பிரமுகர் என தெரிகிறது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், கைதானவர் தி.மு.க பிரமுகர் அல்ல என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாணவரை தாக்கி, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது.
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரை அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் என்றும், அவர் இதற்கு முன்பு 2011-ல் பாலியல் வழக்கில் கைதாகி சிறை சென்றவர் என்பதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் போலீஸ் விசாராணையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, போலீசார் ஞானசேகரனைக் கைது செய்யும்போது, அவர் தப்பி ஓடியபோது கீழே விழுந்ததில் இடது கை, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் தி.மு.க பிரமுகர் என தெரிகிறது என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், கைதானவர் தி.மு.க பிரமுகர் அல்ல என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தி.மு.க பிரமுகர் என தெரிகிறது என குற்றம்சாட்டிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஞானசேகரன், தி.மு.க அமைச்சர் மா. சுப்பிரமணியன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருக்கும் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.
— K.Annamalai (@annamalai_k) December 25, 2024
தமிழகம் முழுவதும், இதுபோன்ற… pic.twitter.com/K1ahEoIqE0
இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது.
1.ஒரு குற்றவாளி, தி.மு.க-வில் உறுப்பினராவதோடு, அந்தப் பகுதி தி.மு.க நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார்.
2.அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார்.
3.அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது.
தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசே பொறுப்பு.
எவ்வளவு காலம் தமிழக மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இப்போதாவது பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தி.மு.க பிரமுகர் என தெரிகிறது என்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றம்சாட்டுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் தி.மு.க பிரமுகர் என்பது பொய்; அண்ணாமலை கூறியது தவறான தகவல்; எது நடந்தாலும் தி.மு.க-வை குறை சொல்வது என்பது அண்ணாமலையின் பிறவி குணம்; அதன் அடிப்படையில் சொல்கிறாரே தவிர, உண்மைல்ல” என்று அமைச்சர் கோவி. செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.