Anna University Scam: அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு வழக்கில் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் உதவி பேராசிரியரின் முன் ஜாமின் மனுவுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் மாணவர்களின் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா, தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் அன்புசெல்வன் உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.
இதை தொடர்ந்து, முன் ஜாமின் கோரி, உமா மற்றும் அன்புச்செல்வன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உமா தரப்பில், கடந்த 2015 முதல் 2018 மார்ச் மாதம் வரை மட்டுமே தான் தேர்வு கட்டுப்பாட்டாளராக இருந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை முறையான விசாரணை நடத்தாமல் தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மறுமதிப்பீடு பணிகளில் தான் கலந்து கொள்ளாத நிலையில் தன் மீதும் பொய்யான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளதாக அன்புச்செல்வன் தரப்பிலும் வாதிடப்பட்டது.
இருவரின் வாதங்களை கேட்ட நீதிபதி, மனுவுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.