டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் கைது செய்யப்பட்ட பா.ஜ.க-வினரை மாலை 6 மணி ஆகியும் விடுவிக்காததால், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்திய சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும், மதுவிலக்கு துறையின் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி ஆகியோரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.
இதைத் தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலைக் கண்டித்து டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக பா.ஜ.க அறிவித்தது. அதன்படி,
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறி போராட முயன்ற தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் இன்று (17.03.2025) கைது செய்யப்பட்டனர். இவர்கள், சென்னையில் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் கைது செய்யப்பட்ட பா.ஜ.க-வினரை மாலை 6 மணி ஆகியும் விடுவிக்காததால், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள். டாஸ்மாக் அலுவலகத்தையே மூடிய பிறகு எங்களால் என்ன பிரச்சனை ஏற்பட போகிறது ? மாலை 6 மணியாகியும் எங்களை விடுவிக்காதது ஏன் ? கொல்கத்தா நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும். 3 விமானங்களை விட்டுவிட்டேன்” என்று போலீசாருடன் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதே போல, டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழிசை உள்ளிட்டோர் கைது செய்து சென்னை வளசரவாக்கம் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலை 6 மணிக்கு மேல் ஆகியும் எங்களை விடுவிக்காதது ஏன் என்று கேட்டு தமிழிசை சௌந்தரராஜன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது தமிழிசை கூறுகையில், “மாலை 6 மணிக்கு மேலாகியும் எங்களை விடுவிக்க மறுப்பது ஏன்? கைது செய்யப்பட்டதும் சிலரைப் போல நெஞ்சு வலி என நாங்கள் நாடகமா போடுகிறோம்? இரவு 7 மணி ஆகியும் எங்களை விடுவிக்க மறுப்பது ஏன்? நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? எங்களை விடுவிக்க உத்தரவு தராதது யார்?” போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
இந்நிலையில், சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டுள்ளார்.