ஆவின் பால் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆவின் பாலில் கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "இதில் உண்மை தன்மை இல்லை. வட மாநிலங்களில் உள்ள நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, வட மாநில நிறுவனத்திடம் இருந்து கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்துக்கு எதிராக பேசுகின்றனர்" என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து இதற்கு பதிலளித்த அண்ணாமலை, தன் மீதான குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுவெளியில் வெளியிடவேண்டும். 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். இல்லை எனில் தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலடி கொடுத்த மனோ தங்கராஜ், "எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் , பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல. பெரியாரின் பேரன்கள்" என்று கூறி X தளத்தில் பதிவிட்டிருந்தார். இவ்வாறு சமூக வலைதளங்களில் இருவருமிடையே வார்த்தைப் போர் தொடர்ந்து வந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி வழக்கு தொடர உள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை.
ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“