அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றும் கூறப்பட்டுள்ளது.
பெண்ணை பயமுறுத்துவதற்காக சார் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக ஞானசேகரன் தெரிவித்த நிலையில் இனிமேல் யார் அந்த சார் என்று யாராவது கேள்வி எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருத்ப்படும் என்று அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன. யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? சில விடைகளும், பல கேள்விகளும்!" எனக்கூறியுள்ளார்.
மேலும், வீடியோவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது," கடந்த ஆண்டு டிச.23-ந்தேதி இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். டிச. 24 ஆம் தேதி ஞானசேகரனை கோட்டூர் போலீசார் கைது செய்கின்றனர். அதன்பின் விடுதலை செய்கின்றனர் மறுநாள் 25 ஆம் தேதி மாலை ஞானசேகரனை மீண்டும் கைது செய்கின்றனர். இதை உங்கள் முன்னால் வைக்கிறேன்.
ஏன் ஞானசேகரனை விடுதலை செய்தார்கள்? இதில் யாரெல்லாம் சமபந்தப்பட்டு இருக்கிறார்கள்? எதற்காக திமுக-வில் சில தலைவர்களுக்கு பதட்டம்? சாட்சிகளை அழிப்பதற்கான வாய்ப்பு இருக்கு” என்றார்.