/indian-express-tamil/media/media_files/4eNPxYDeWkigu2z50Jni.jpg)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சரவணம்பட்டி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “பிரதமர் மோடி நாளை தமிழகம் வர உள்ளார். நாளை மாலை மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் ரோடு ஷோ - வாகன பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மாலை 6 மணிக்கு மேல் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து இரவு சென்னையில் தங்கும் பிரதமர், மறுநாள் காலை வேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தர்மபுரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சௌமியா அவர்களையும் வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி சண்முகம் அவர்களையும் ஆதரித்து தேர்தல் பரப்பரை மேற்கொள்கிறார்.
அதனை தொடர்ந்து, கோவை வரும் பிரதமர் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி, கோவை, மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்பரை மேற்கொள்கிறார்.
மீண்டும் 12 ஆம் தேதிக்கு பின்னர் பிரதமர் தமிழகம் வர உள்ளார். அப்போது அவர் சென்றிடாத தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்பரை மேற்கொள்ள உள்ளார்" என அண்ணாமலை தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தவர்,
“திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தொடர்பு படுத்தி நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சதி வேலை செய்து தனது பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் பணத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்து உள்ளார். இதற்குப் பிறகு அந்த விவகாரத்தில் பேசுவதற்கு எதுவும் இல்லை. தேர்தலானையமும், பறக்கும் படையினரும் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க் கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர்.
தேர்தல் சமயத்தில் தி.மு.க அனைத்து தவறுகளையும் செய்து விட்டு மற்றவர்களை திருடன் என்கிறது. உண்மையான திருடன் தி.மு.க தான் என ஆர்.எஸ்.பாரதி பேசுவதிலேயே தெரிகிறது. கோவையில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தி.மு.க விற்கு வாக்களித்தால் தங்கத்தோடும், 2000 பணமும் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வருகிறது. இதையெல்லாம் மறைப்பதற்காக ஆர் எஸ். பாரதி திருடன் திருடன் என பேசி வருகிறார்.
பா.ஜ.க சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒவ்வொரு பஞ்சாயத்தில் உள்ள தாய் கிராமத்தில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அடிப்படை விளையாட்டு உபகரணங்களும் மைதான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும் என கூறி உள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தான் முதல்வர் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கூறி உள்ளார்.
தமிழ்நாட்டிற்கு சர்வதேச மைதானங்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கோவையில் தரமான சாலைகள் இல்லை, சரியாக குப்பைத் தரம் பிரித்து பராமரிப்பது இல்லை, இந்த நிலையில் அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் கொண்ட கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என கூறுவது சரி. நான்காயிரம் கோடி மதிப்பீட்டில் சர்வதேச மைதானம் என கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் கூறி உள்ளார். தி.மு.க வின் பொய்யான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும்' என தெரிவித்தார்.
அ.தி.மு.க வின் ஆர்.வி.உதயகுமார் கருத்து குறித்து பதில் அளித்தவர்,
அனையப் போகும் விளக்கு தான் பிரகாசமாக எரியம். இன்னும் 40 நாட்களில் யார் காணாமல் போவார்கள் என்பது தெரிந்துவிடும் என்றார்.
நாக்பூர் இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்படும் என்ற கமலின் கருத்துக்கு பதில் அளித்தவர்,
கமல் மூளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், சுய நினைவோடு தான் இருக்கிறாரா என்பதை அவர் மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது கட்சியை தி.மு.க விற்கு கமல் விற்று விட்டார் என விமர்சித்தார்.
பிரதமர் தொடர்ச்சியாக தமிழகம் வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,
முதல்வர் ஸ்டாலின் எந்த கிராமத்திற்கும் செல்வதில்லை. ஸ்பெயின், லண்டன், துபாய் என வெளிநாடுகளுக்கு தான் செல்கிறார் கிராமத்திற்கு வந்து மக்களை அவர் சந்திப்பதில்லை.
நேற்று பல்லடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பத்திரிக்கை நண்பர்கள் கட்சி ஐ.டி பிரிவு நிர்வாகிகளை தாக்கியதோடு உபகரணங்களை உடைத்து உள்ளனர். அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பேசி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. கருத்து சுதந்திரத்தில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை மற்றவர்களை தாக்குவது தான் கண்டிக்கத்தக்கது.
பல்லடம் சூலூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. விசைத் தறி தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், நீர் ஆதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர். அதற்கு பா.ஜ.க தீர்வுகளை கொடுத்து உள்ளது. ஆனைமலை நல்லாறு திட்டம், பாண்டியாரு முண்ணம்புலா திட்டம், பவர் டெக்ஸ் திட்டம் ஆகியவை அமல்படுத்தப்படும் என கூறி உள்ளோம். சோலார் மின்.தகடு பொருத்த மானியத்தை உயர்த்தி 75 சதவீதமாக கொடுப்போம் எனவும் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எனவும் நூல் வங்கிகள் உருவாக்கப்பட்டு நூல் விலை கட்டுக்குள் வைக்கப்படும் எனவும் உறுதியளித்து உள்ளோம்.
கோயம்புத்தூர் நகர பகுதியை பொறுத்த வரை 150 - க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட நகரின் ஒரு பகுதியில் அடிப்படை கழிவறை வசதி கூட இன்னும் கட்டப்படவில்லை. சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும், சரியான இடங்களில் பாலம் அமைக்க வேண்டும், நீர் நிலைகளை புனரமைக்க வேண்டும், விளையாட்டு கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும், ஆட்டோமொபைல் மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக்கான வளர்ச்சி மற்றும் பசுமையான சுற்றுச் சூழலை உருவாக்க வேண்டும் என வாக்குறுதிகள் நாங்கள் கொடுத்து வருகிறோம். தேசிய தேர்தல் அறிக்கை வெளியானதும் இந்த தொகுதிக்கான தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும்.
நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதற்கு நூல் விலை உயர்வு மட்டுமே காரணம் இல்லை. தி.மு.க வின் அதிகப்படியான மின்சார கட்டண உயர்வும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்காகவே தரமான நூல்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்காகவும் ஏற்றுமதியை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளோம்.
காலை உணவு திட்டம் என்பது தி.மு.க வின் யோசனையால் உருவான திட்டம் என கூற முடியாது, தேசிய கல்விக் கொள்கை 2020 இல் காலை உணவு திட்டம் உள்ளது. பெங்களூரில் இஸ்கான் அமைப்பினர் அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கி வருகின்றனர். இதற்காக அனுமதி கேட்டபோது தமிழக அரசு மறுத்தது.
சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என யாரையும் நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. அனைவரையும் கோவை மக்கள் என சமமாக கருதி அவர்களின் வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை எடுத்துரைத்து வருகிறோம்.
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி கோவையின் தேர்தல் களத்தை இயக்கி வருவது தெளிவாக தெரிகிறது. கரூர் கம்பெனி ஆட்கள் என கூறுபவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர் சிறையில் இருந்து எழுதும் கதையை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செயல்படுத்தி வருகிறார். மக்கள் இதை நன்கு அறிந்து உள்ளனர். தங்கச் சுரங்கத்தை கோவையில் கொட்டினாலும் பா.ஜ.க தான் வெற்றி பெறும் என்பது உறுதி.
அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு பொறுமை அவசியம். நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்பினால் தோல்விகளை ஏற்றுக் கொண்டு பொறுமையாக இருக்க வேண்டும். பகுதி நேரமாக கூட அரசியலில் ஈடுபட்டு கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க வேட்பாளர் எனது பிரச்சார வாகனத்தை சிறை பிடித்ததாக கூறி போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அந்த வாகனத்தில் நான் இல்லை. வெறும் டயரை சுற்றி தான் அவர்கள் அமர்ந்து உருண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் பிரச்சாரம் செய்யும் இடத்தில் நாங்கள் செல்லவில்லை.
ஜூன் நான்காம் தேதி சாமானியனின் குரலை சாராய வியாபாரியின் மகன் கேட்கப் போகிறார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வை சுட்டிக் காட்டினார். 60% வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
வாக்குக்கு பணம் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். மற்றவர்கள் காசு கொடுக்கிறார்களா இல்லையா என்பதை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரின் வேலை ஆகும்.
தமிழக தேர்தல் ஆணையம் பா.ஜ.க விற்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற கருத்து பொய்யானது. பா.ஜ.க வின் விளம்பரங்களுக்கு அவர்கள் அனுமதி அளிப்பதில்லை. நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை. நீதிமன்றத்திற்கு சென்று நாங்கள் அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்” என அண்ணாமலை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.