பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வி.சி.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அர்பன் நக்சலான ஆனந்த் டெல்டும்டே ஏன் கலந்து கொள்ள வேண்டும் எனவும், தமிழகத்தில் நக்சல் அரசியல் ஊடுருவலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மணிப்பூர் கலவரம் குறித்து பேசும்போது அதற்கு காரணமான அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும் எனவும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தான் வடகிழக்கு மாநிலங்களில் மக்களுக்கு எதிரான சிறப்பு ஆயுத சட்டங்கள் பெருமளவு நீக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார். ஆனால், அர்பன் நக்சலான அம்பேத்கரின் பேத்தியை மணந்த ஆனந்த் டெல்டும்டே இந்நிகழ்வில் கலந்து கொண்டது தமிழகத்தில் நக்சல் அரசியலைக் கொண்டு வருவதற்கான செயல் எனவும், இதனை விகடன் நிறுவனம் செய்திருக்கக் கூடாது எனவும் கூறினார்.
ஆனந்த் டெல்டும்டேவின் சகோதரர் மிலின் டெல்டும்டே 2021-ம் ஆண்டு நக்சல்களுக்கு எதிரான என்கவுண்டரில் கொல்லப்பட்ட நக்சல்களில் ஒருவர் எனவும், பீமா கொராகன் கலவரம் குறித்து ஆனந்த் டெல்டும்டே வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி தற்போது உச்ச நீதிமன்ற ஜாமினில் வெளியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், லாட்டரி அதிபரின் மகனான வி.சி.க துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தி.மு.க-வை மன்னர் ஆட்சி என விமர்சிக்கிறார். ஆனால், அவரது மாமனார் தான் தேர்தல் பத்திரங்களின் மூலம் திமுகவிற்கு 581 கோடியை வழங்கி உள்ளார் எனவும் ஆதவ் அர்ஜுனா சபரீசனுக்கும் மிக நெருக்கமாக இருந்து கடந்த தேர்தலில் பணியாற்றியவர் எனவும் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை எனவும், லாட்டரி அதிபரின் மருமகன் கையில்தான் உள்ளது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுவதாகவும், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க திருமா தயாராக இல்லை எனவும் அண்ணாமலை விமர்சித்தார்.
மேலும், தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் யுத்தியாக தி.மு.க-வே இதை செய்வதாக கருதுவதாகவும், அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் பேசியுள்ளார், அவர் உட்பட எந்த அரசியல்வாதிகள் மணிப்பூர் செல்ல நினைத்தாலும் அவர்களோடு சென்று அங்குள்ள நிலையை விளக்க நான் தயாராக உள்ளேன் என கூறிய அண்ணாமலை, விஜய் மணிப்பூர் விவகாரம் குறித்த அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், அங்குள்ள பழங்குடியினர் பிரச்சனைகள், மியான்மர் நாட்டிலிருந்து ஊடுருவல், போதை கலாச்சாரம் ஆகியவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், காங்கிரஸ் ஆட்சியின் போது சிறப்பு ஆயுதச் சட்டத்தை ரத்து செய்யக் கூறி பெண்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்திய மோசமான சூழல் இருந்த நிலையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அசாம், மணிப்பூர், அருணாச்சல் பிரதேஷ், நாகாலாந்து ஆகிய பகுதிகளில் பெருமளவு சிறப்பு ஆயுத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள வடகிழக்கு மாநிலங்களிலும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், மணிப்பூரில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் போதைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையைவிட பா.ஜ.க ஆட்சியில் தான் அதிக அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், எந்த விதத்திலும் துப்பாக்கிச் சூடு இதற்கு தீர்வு இல்லை என பா.ஜ.க நினைப்பதாகவும், ஆக்கபூர்வமான ஜனநாயக முறையில் மணிப்பூர் விவகாரத்தில் பேசி தீர்வு காணப்படும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார், அவர் வி.சி.க-வில் பொறுப்புக்கு வந்தபோது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டவர் எனவும், அப்போது தி.மு.க மன்னர் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது யார் எனவும், தி.மு.க குடும்ப ஆட்சி செய்து வருவதாகவும், வி.சி.க இருக்கும் கூட்டணி குறித்து அக்கட்சி நிர்வாகி விமர்சித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
அதானி விவகாரத்தைப் பொறுத்தவரை அதற்கான அறிக்கையை பா.ஜ.க வெளியிட்டும் அதற்குரிய பதிலளிக்காமல், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நான் படித்தது பற்றி அமைச்சர் பேசியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை பெயர் குறிப்பிடாமல் குறிப்பிட்ட அண்ணாமலை, ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்து பெயில் ரத்தாகி, அவர் ஆளுகின்ற மாநிலத்திலேயே அவரது தம்பி தலைமறைவாக இருக்கிறார் என்றார். அந்த அமைச்சரின் சகோதரர் அமலாக்கத்துறை விசாரணையில் கைதி என தெரிவித்த அவர் கரூர் சென்றால் அவரை தூக்கி வந்துவிடலாம். ஆனால், தமிழக காவல்துறை அதனை செய்யாது என தெரிவித்தார். இவ்வாறு செய்யும் பொழுது அவரை ஜாமீன் அமைச்சர் என்று சொல்லாமல் எப்படி சொல்வது எனவும் கேள்வி எழுப்பினார். டிசம்பர் 13-ம் தேதி வரை பொறுத்து இருந்து உச்ச நீதிமன்றத்தில் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம் எனவும் தெரிவித்தார்.
அதானி அம்பானிக்கு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பணம் கொடுத்ததாக செந்தில் பாலாஜி கூறினாலும் அதன் பிறகு 77 கோடியை கொடுத்தீர்கள் எனவும், அதன் முதலில் பெனால்டி சார்ஜ் ஆக கொடுத்ததை ஏன் மறைத்தீர்கள் எனவும் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக கொடுத்தது ஏன் மறைத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “இ.டி கேசில் உள்ள போன நீ எல்லாம் என் மேலே கேஸ் போட்டு, எஃப்.ஐ.ஆர் வாங்கணும்னு என்னுடைய தலைவிதி, ஒரு வருஷம் ஜெயிலில் கம்பி எண்ணுனவன் நீ, நான் ஆக்ஸ்போர்ட்டில் படித்த அதே நேரத்தில் இந்த அமைச்சர் புழல் சிறையில் கம்பி எண்ணி படித்தார்” என ஒருமையில் காட்டமாக விமர்சித்தார். மேலும், “என்னை பொருத்தவரை கேட்ட கேள்விக்கு பதில் வரவேண்டும் அதானிக்கு கொடுத்தியா? இல்லையா?, ஆட்சிக்கு வந்த பிறகு 77 கோடி ரூபாய் கொடுத்தாயா இல்லையா கொடுத்தேன் என்று ஒத்துக்கோ... அதை விட்டுவிட்டு சுத்தி சுத்தி வளைக்கின்ற வேலையெல்லாம் என்னிடம் விட வேண்டும். தைரியம் இருந்தா என் மேலே கேஸ் போடுயா பார்த்துக்கலாம். சரியான அப்பா அம்மாவுக்கு பொறந்திருந்தா கேஸ் போடு பார்க்கலாம்...” என்று சவால் விடுத்தார்.
“தமிழ்நாடு அரசியலில் ஒரு மாற்றத்தை பார்த்தே ஆக வேண்டும். ஜெயிலில் இருக்கக்கூடிய அமைச்சர் கூறுகின்ற அளவிற்கு என்னுடைய அரசியல் மோசமாகிவிட்டதா?, முதலமைச்சர் உனக்கு நெருங்கிய நண்பர், அவருக்கு பையன் மாதிரி என்றெல்லாம் கூறுகிறார், கேஸ் போடுங்கள் பார்க்கலாம். மகனை விட முக்கியமான அமைச்சர் என்று முதல்வரே கூறுகிறாரே, நீ போய் அவர் காலில் விழு டி.ஜி.பி-யிடம் போய் கூறி என் மீது கேஸ் போடு பாத்துக்கலாம்.” என்று அண்ணாமலை சவால் விடுத்தார்.
“நியாயத்தை பற்றி கேட்டால் அமைச்சர் பதவி என்று கூறுகிறார்கள், நியாயத்தை பேசினால் மிரட்டல் விடுக்கிறார்கள், அதனால்தான் அறிக்கையை தைரியமாக அளித்தேன். ஊரிலிருந்து இருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்திருப்பேன். இங்கு வந்து உங்களை எல்லாம் எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். உங்களை மாதிரியான ஆட்களை எல்லாம் ஓட விட வேண்டும் என்பதற்காகத்தான் தவமாக எடுத்து அரசியலுக்கு வந்துள்ளேன்.” என்று காட்டமாகக் கூறினார்.
ஐ.ஏ.எஸ் ஆபீஸர் எழுதி தருவதை தான் இவர் படிக்கிறார். நான் இங்கு சிங்கிள்மேன் ஆர்மியாக அமர்ந்து அறிக்கை தயார் செய்து google செய்ய வேண்டும் அதானியின் அறிக்கையை படிக்க வேண்டும் என்னிடம் ஐஏஎஸ் அதிகாரிகளா உள்ளார்கள் என்னிடம் அரசியல் நண்பர்கள் தான் உள்ளார்கள். கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் ஆக்ஸ்போர்ட் போனதை பற்றி பேசுகிறார். "நீ எல்லாம் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஆவது படித்தாயா என்று தெரியவில்லை கம்முனு இருக்க வேண்டியதுதானே. நான் ஆக்ஸ் வேர்ட் சென்றது எல்லாம் பெருமையாக கூறவில்லை எனவும் காமராஜர் ஐயா படிக்காததை நான் தற்பொழுதும் பெருமையாக கூறுகிறேன் என தெரிவித்தார்.
திமுக அமைச்சர்களுக்கு ஒன்றே ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன் மறுபடியும் நான் ஒரு ஆண்டு காலம் பின் செல்ல விரும்பவில்லை. ஆரோக்கியமான அரசியலை செய்யுங்கள் நானும் ஆரோக்கியமான அரசியலை செய்கிறேன். நான் ஆரோக்கியமான அரசியலை செய்ய வந்துள்ளேன் எனவும் நீங்கள் செய்வதை எல்லாம் மோப்பம் பிடித்து மோப்பம் பிடித்து பத்திரிக்கையாளர்களிடம் கூறுவது தான் என்னுடைய வேலை என்று நினைத்தால் அது என்னுடைய வேலை இல்லைஎன்னுடைய வேலை ஆரோக்கியமான அரசியல் செய்வதுதான் என தெரிவித்தார்.
சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி வைத்த காவல் துறையினர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாளை தமிழக டிஜிபியை சந்தித்து பாஜக சார்பில் மனு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கேரளாவிற்கு வைக்கம் போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் விவசாயிகளின் பிரதான பிரச்சனையாக உள்ள முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்தும், கேரளா அரசு தமிழகத்தின் உரிமையை மறுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட அவர், இந்த அரசு நீர் மேலாண்மையில் ஃபெயிலியர் எனவும் விமர்சித்தார்.
காளபட்டியில் புதிய இல்லத்தில் குடி புகுந்தது குறித்த கேள்விக்கு, நான் பங்களா வாங்கும் போது அல்லது ஒரு வீடு வாங்கும் போது கண்டிப்பாக பத்திரிக்கையாளர்களை அழைத்துச் செல்வேன் எனவும் வீடு வாங்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை எனவும் தெரிவித்தார். கோயம்புத்தூரில் இருப்பதற்கு ஒரு வீடு தேவைப்பட்டது எனவும் ஐந்தாண்டு காலமாக மாமனார் இல்லத்தில் அழையா விருந்தாளியாக இருக்கிறேன் எனவும் அங்கு கட்சிக்காரர்கள் எல்லாம் வரும்பொழுது வெளியே நிற்பதாகவும் தெரிவித்த அவர் எனவே காளப்பட்டி சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதாக தெரிவித்தார். ஒவ்வொரு இடத்திலும் கஷ்டப்பட்டு வாடகை வீட்டை பிடிக்கிறேன் எனவும் சென்னையிலும் பிரச்சனை நடந்து ஒரு வாடகை வீட்டிலிருந்து இன்னொரு வாடகை வீட்டுக்கு சென்றதாகவும் எனக்கு இருக்கக்கூடிய பிரச்சனை எனக்கு தான் தெரியும் என தெரிவித்தார். தனக்கு சிஆர்பிஎப் செக்யூரிட்டி இருப்பதால் ஒரு வீட்டிற்கு சென்றால் அது குறித்து மத்திய அரசில் தெரிவிக்க வேண்டும் எனவும் நான் எந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறேன் எவ்வளவு வாடகை யார் வீட்டின் உரிமையாளர் என்பது எல்லாம் காவல்துறையினருக்கு தெரியும் எனவும் என தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா குறித்தான கேள்விக்கு சினிமா செய்திகள் எல்லாம் பார்க்க மாட்டேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ஏணியில் ஏறிய பிறகு ஏணியை தட்டி விடுவது தான் திராவிட கட்சிகளின் பழக்கம் எனவும், சினிமா துறையில் மேலே வந்தவுடன் ஏணியை எட்டி உதைத்து விட்டார்கள் எனவும் சாடிய அவர், உதயநிதி ஸ்டாலினும் சினிமா நடிகர் ஆக இருந்தவர்தான் தற்பொழுது ஏகப்பட்ட படத்தை தயாரிக்கிறார் எனவும் அவருடைய அப்பா முதலமைச்சரு மு க ஸ்டாலினும் சினிமாவில் ஹீரோவாக நடித்தவர் எனவும் அவருடைய தாத்தா கருணாநிதி ஐயா அவர்கள் சினிமாவிற்கு கதை வசனம் எழுதியவர் தான் என குறிப்பிட்ட அவர் தற்பொழுது அந்த குடும்பம் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று கூறினால் தமிழகத்தில் சினிமா சரியில்லை என்று ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது இவர்கள் வந்த பிறகு தமிழக சினிமா தரம் தாழ்ந்து விட்டதா என குற்றம் சாட்டுகிறார்கள் என கேள்வி எழுப்பினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பொறுப்பில் இருப்பதால் மக்கள் ஒரு பொறுப்பான பதிலை எதிர்பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
நாளை பாஜக பொதுச்செயலாளர்கள் நிதி அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பாக புயல் சம்பந்தமாக அறிக்கைகளை தர இருப்பதாகவும் எனவே கோவையை பொறுத்த வரை இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பது எங்களுடைய கடமை எனவும் அதனை படிப்படியாக செய்வோம் என தெரிவித்தார்.
நிச்சயமாக கிழக்கு புறவழிச்சாலை வரவேண்டும் எனவும் வரும் காலத்தில் இன்னொரு விமான நிலையம் கூட வரலாம் எனவும் புறவழிச்சாலை என்பது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்த அவர் நிலம் கொடுப்பவர்களுக்கும் உரிய தொகை கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஐபிஎஸ் அதிகாரி குறித்து சீமான் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், சீமான் அப்படி எல்லாம் இல்லை எனவும் நாங்கள் நேர் எதிர் பாதையில் இருக்கிறோம் எனவும் இதனை பெரிது படுத்தாமல் பிரச்சனையை முடித்துக் கொள்ளலாம் எனக் கூறினார்.
என்னைப் பொறுத்தவரை பட்டியலின மக்கள் மிக மிக முக்கியமானவர்கள் எனவும் பட்டியலின மக்களை மையப்படுத்தி தமிழக அரசியல் நகர்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்த அவர் அதேசமயம் திருமாவளவனை மையப்படுத்துவது என்பது பிரச்னையை அவர்கள் தான் ஆரம்பித்தார்கள் என புத்தக வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டார். புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை தான் சென்று வரக்கூறியதாக திருமாவளவன் சென்னையில் அளித்த பேட்டி குறித்த கேள்விக்கு, ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்களுக்கு திருமாவளவன் பொறுப்பேற்பாரா? என கேள்வி எழுப்பினார்.
செய்தி: பி. ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.