பா.ஜ.க பெண் நிர்வாகியிடம் திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்துள்ள நிலையில், கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தடை விதித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க.,வின் ட்விட்டர் பக்கத்தில், பா.ஜ.க பெண் உறுப்பினர் டெய்சி சரண் மற்றும் சூர்யா சிவா இருவரின் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் சம்பவத்தை விசாரித்து கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார் என பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ராமஜெயம் கொலை வழக்கு: 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை; 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மேலும், அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பா.ஜ.க.,வின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும், ஓ.பி.சி அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் என் கவனத்திற்கு வந்தது.
இந்தச் சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் கனக சபாபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை திருச்சி சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil