சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் தமிழகத்துக்கு வரும் 5 ஆண்டில் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும். சுமார் பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த விண்வெளி தொழில் கொள்கை முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும் என தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தள பக்கத்தில், "தமிழ்நாடு அரசு வெளியிட்ட விண்வெளி தொழில் கொள்கை, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர் ஸ்பேஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கியபோதில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், தொடங்கப்பட்ட வானம் ஸ்பேஸ் எல்.எல்.பி. நிறுவனத்தின் பங்குதாரராக முதலமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர் இருக்கிறார். இந்த கொள்கையின் மூலம், அந்த ஸ்பேஸ் நிறுவனம், குறைந்தபட்சம் 20 சதவீதம் மூலதன மானியத்தை பெறும்.
எனவே, இது தொழில் கொள்கை அல்ல. அவர்களின் குடும்பத்தின் கொள்கை. தமிழகம் முதலீடுகளை பெற திணறி வருகிறது. மேலும், 2025-ம் நிதியாண்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் போராடி வருகிறது. இந்த சூழலில், தங்கள் குடும்பத்தினர் பயனடைவதற்காக தொழில் கொள்கையை வெளியிட்டுள்ளது அவமானமானது." என்று அவர் பதிவிட்டுள்ளார்.