பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னப் பிள்ளைக்கு வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது கண்டிக்கத் தக்கது, இந்த குற்றச்சாட்டு தி.மு.க அரசின் மீதுதான் என்பதுகூடத் தெரியாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் , பில்லுசேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப் பிள்ளை. இந்தப் பகுதி மக்களின் வேளாண் பணிகளில் கொத்து தலைவியாகச் செயல்பட்டு, களஞ்சியம் சுயஉதவிக்குழுக்களின் வாயிலாக அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர். இவர் கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாய்பாயிடம் இருந்து ஸ்த்ரிசக்தி புரஸ்கார் விருது பெற்றவர். இந்த விருது வழங்கும்போது சின்னப் பிள்ளை காலில் வாஜ்பாய் விழுந்து வணங்கினார். 2019-ம் ஆண்டு சின்னப் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பொற்கிழி விருது அளித்தார். 2018-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி கையால் ஔவையார் விருதும், 2019-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.
இந்நிலையில், தனக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்பட்ட நிலையில், இதுவரை வீடு கட்டித் தரப்படவில்லை என்றும், இதனால் மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என்றும் சின்னப்பிள்ளை கூறினார். சின்னப் பிள்ளை தனக்கு வீடு இல்லாததால் தனது மூத்த மகன் வீட்டில் வசித்து வருவதாக தனது நிலையை ஊடகங்களில் தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடடினயாக 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் மதுரை - அழகர்கோவில் முதன்மை சாலையில் அப்பன் திருப்பதி அருகேயுள்ள திருவிழான்பட்டியில் 1 சென்ட் 380 சதுர அடி நிலத்தை ஒதுக்கீடு செய்து, இந்த மாதமே கட்டுமானப் பணிகள் அனைத்தும் நடைபெறும் எனவும் அறிவித்தார். மேலும், அதற்கான பட்டா வழங்கவும் மு.க. ஸ்டாலின் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, மதுரை கிழக்கு வட்டாட்சியர் பழனிக்குமார், சின்னப்பிள்ளையை பில்லுசேரியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வீடு ஒதுக்கீட்டிற்கான பட்டாவை சனிக்கிழமை (09.03.2024) வழங்கினார். தற்போது நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதியில், ஜே.சி.பி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பத்மஸ்ரீ சின்ன பிள்ளை அவர்கள் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன்.
— M.K.Stalin (@mkstalin) March 9, 2024
கவலை வேண்டாம்!
ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா… https://t.co/DmjAzlpZOC
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிடுகையில், “பத்மஸ்ரீ சின்ன பிள்ளை அவர்கள் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன். கவலை வேண்டாம்!
ஏற்கனவே, அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் அவருக்குப் புதிய வீடும் வழங்கப்படும். இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும்!” என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த பதிவுக்கு எதிர்வினையாற்றியுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மதுரை சின்னப் பிள்ளைக்கு வீடு வழங்காத குற்றச்சாட்டே தி.மு.க அரசின் மீதுதான் என்பது கூடத் தெரியாமல் முதலமைச்சர் அரசியல் செய்கிறார் என்று விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளைக் கண்டறிந்து மத்திய அரசின் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்பது கூடத் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இருப்பது வேதனைக்குரியது.… https://t.co/KhvPp8erBL
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 9, 2024
முதல்வரின் எக்ஸ் பதிவை பகிர்ந்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: “மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளைக் கண்டறிந்து மத்திய அரசின் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்பது கூடத் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இருப்பது வேதனைக்குரியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அம்மா அவர்களுக்கு, வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது என்பது, திமுக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது கூடத் தெரியாமல் அரசியல் செய்யப் கிளம்பியிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின்.
அது மட்டுமல்லாது, மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பின்னர் வீடு கட்ட வெறும் ஒரு சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியிருக்கிறார். அது குறித்துப் பலமுறை முறையிட்ட பின்னரும், அதற்கு எந்தத் தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மா அவர்கள்.
இவை அனைத்தையும் மறைத்து விட்டு, வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.” என்று விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.