பிரதமர் மோடியை வரவேற்று தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பத்திரிகைகளில் அளித்த விளம்பரத்தில் சீன கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் இடம்பெற்றது சர்ச்சையாகியுள்ளது.
தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணண் அளித்த விளம்பத்தில் சீனக் கொடி இடம்பெற்றிருப்பது, சீனா மீதான தி.மு.க.வின் விஸ்வாசத்தையும், நமது நாட்டின் இறையாண்மையை தி.மு.க முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்துகிறது என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக தமிழ்நாடு வருகை தந்துள்ளார். செவ்வாய்க்கிழமை பல்லடத்தில் நடைபெற்ற அண்ணமாலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசினார். பின்னர், மதுரையில், குறு சிறு நடுத்தர தொழில்முனைவோர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரினம் செய்தார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (பிப்ரவரி 28) தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி என்பதால், தூத்துக்குடி தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, தூத்துக்குடி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, தூத்துக்குடி தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தி.மு.க நாளிதழான முரசொலி உள்ளிட்ட நாளிதழ்களுக்கு விளம்பரம் அளித்துள்ளார்.
அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கும் வாசகங்கள்: “தலைவர் கலைஞர் அவர்கள் முன்வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்திய ‘குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்’ அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிட தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தரும் மாண்புமிகு இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களையும்,
நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து திட்டம் நிறைவேற தொடர்ந்து வலியுறுத்தி பெற்றுத் தந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களையும் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைசர் எ.வ. வேலு அவர்களையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்” என்று விளம்பரம் இடம்பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல், இந்த விளம்பரத்தில், பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அருகே இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இவர்களுக்கு பின்னணியில் ராக்கெட் மற்றும் ஏவுக்கணைகள் இடம்பெற்றுள்ளன. இதில், சீனக்கொடியுடன் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு ராக்கெட் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பா.ஜ.க-வினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்த விளம்பரத்தில் சீனக்கொடி இடம்பெற்றிருந்தது சர்ச்சையான நிலையில், இந்த விளம்பரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இருவரும் விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரத்தில், சீன ராக்கெட் பயன்படுத்தப்பட்டது தி.மு.க-வின் சீனா மீதான விஸ்வாசத்தையும், நமது நாட்டின் இறையாண்மையை தி.மு.க முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்துகிறது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “தி.மு.க அமைச்சர் திரு அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த இந்த விளம்பரம், சீனா மீதான திமுகவின் விஸ்வாசத்தையும், நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்துகிறது.
ஊழலில் கொடிகட்டிப் பறக்கும் கட்சியான தி.மு.க, குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
விரக்தியின் அளவு அவர்களின் கடந்த கால தவறுகளை புதைக்கும் முயற்சியை மட்டுமே நிரூபிக்கிறது, ஆனால் திமுகவால்தான்சதீஷ் தவான் விண்வெளி மையம் இன்று ஆந்திராவில் உள்ளது. ஏன் தமிழ்நாட்டில் இல்லை என்பதற்கு திமுகவே காரணம் என்பதை நாம் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
இஸ்ரோவின் 1-வது ஏவுதளம் கருத்தாக்கம் செய்யப்பட்டபோது, இஸ்ரோவின் முதல் தேர்வாக தமிழ்நாடு இருந்தது. கடுமையான தோள்பட்டை வலி காரணமாக கூட்டத்தில் பங்கேற்க முடியாத அப்போதைய தமிழக முதல்வர் திரு அண்ணாதுரை, தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுப்பி வைத்தார்.
இஸ்ரோ அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர், இறுதியாக மதியழகன் "குடி போதையில் நிதானம் இல்லாத நிலையில்" கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் சரியான நிலையில் இல்லாத காரணத்தால் கூட்டம் முடியும் வரை குழப்பம் ஏற்பட்டது. மேலும், 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் விண்வெளித் திட்டத்தை கையாண்ட விதம் இதுவாகும்.
தி.மு.க பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், நெல்லையில் புதன்கிழமை நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சத்து பேசினார். சீனா கொடி, சீன ராக்கெட்டை வைத்து விளம்பரம் செய்கிறது திமுக என்பதை சுட்டிக்காட்டிப் பேசினார். இதிலிருந்து இந்தியாவின் மீது தி.மு.க.விற்கு உள்ள பற்று என்ன என்பதை இந்த விளம்பரமே காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தி.மு.க-வைக் கடுமையாகச் சாடினார்.
இதனிடையே, நெல்லையில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இன்று காலை திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பத்திரிகை விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதில் சைனா நாட்டின் ராக்கெட்டை போட்டு விளம்பரம் செய்திருக்கின்றனர். ஒரு பக்கம் பிரதமர் நேற்று திருவனந்தபுரத்தில் விண்வெளிக்கு செல்லக்கூடிய 4 இந்தியர்களை அறிமுகப்படுத்தி உள்ளார். இங்கு சைனா காரன் படத்தை போடுகிறார்கள் இதிலிருந்து நாட்டுக்காக 142 கோடி மக்களுக்காக யார் இருக்கிறார்கள். கோபால புரத்திற்காக யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அண்ணாமலை பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.