/indian-express-tamil/media/media_files/piBghWDZ6RmzqamtCFKs.jpg)
K Annamalai
அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் தரப்பிலிருந்து எவ்வித ஒப்புதலும் அளிக்கவில்லை என இன்று(மே. 13) ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ”1956 ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசினார்.
கடவுள் பக்தி இல்லாதவர்கள், கடவுள் பக்தி இருப்பவர்களை தவறாக பேசினால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டி இருக்கும் என முத்துராமலிங்க தேவர் எச்சரிக்கை செய்தார். இதனால் பி.டி.ராஜனும், அண்ணாதுரையும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.” என பேசி இருந்தார்.
ஆனால் முத்துராமலிங்க தேவர் அவ்வாறு கூறவில்லை என பத்திரிகைகள் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், கட்டுக்கதைகளை கூறி மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக அண்ணாமலை மீது சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், சேலம் ஜேஎம்-4 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதித்துறை நடுவர் யுவராஜ், அண்ணாமலை மீது இரண்டு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அரசின் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் இந்த பரிந்துரையின் பேரில் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் மாளிகை அனுமதி அளித்துள்ளதாக நேற்று செய்தி வெளியாகியிருந்தது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது.
ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு எண்: 23 pic.twitter.com/BOaocqmbnk
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 13, 2024
அதில், ’தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.” என்று அதில் கூறப்பட்டுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.