/indian-express-tamil/media/media_files/2025/03/14/g3R200vg0sqrLIpd3djo.jpg)
இந்தியாவில் 10 லட்சம் கோடி கடனை நெருங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கைக்கு பதிலாக வெற்றுப் பேப்பர் அளித்திருக்கலாம் என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் 10 லட்சம் கோடி கடனை நெருங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கைக்கு பதிலாக வெற்றுப் பேப்பர் அளித்திருக்கலாம் என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை (14.03.2025) தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில்: “உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு கடன் வாங்கவில்லை. தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க முடியாத அளவு தமிழகம் தத்தளிக்கிறது. ரூ.1,62,096 கோடி கடன் பெறப்பட்டு உள்ளது. தமிழகத்தை விட பிற மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. வெற்று காகிதம் போல் பட்ஜெட் உள்ளது.” என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “இந்த பட்ஜெட்டால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டு சொன்ன திட்டங்களுக்கு நிதி அறிவிக்கப்படவில்லை. டாஸ்மாக் வருமானத்தை வைத்து கடன் வாங்கியதுதான் நாட்டிற்கு வழிகாட்டியா? 10 லட்சம் கோடி கடனை நெருங்கும் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. சட்டசபையில் அவர்களாகவே பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள். அவர்களாவே புகழ்கிறார்கள். தமிழக அரசு நிதிநிலை அறிக்கைக்கு பதிலாக வெற்றுப் பேப்பர் அளித்திருக்கலாம். தமிழகத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்கிறார்கள். ஆறாம் தலைமுறை வரை கடனுக்கு வட்டி மட்டும் கட்டும் சூழ்நிலையில் தமிழகம் உள்ளது.” கூறினார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை குறித்து பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வரவில்லை. தமிழக லஞ்ச ஒழிப்புபோலீசார் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். டாஸ்மாக் போக்குவரத்து துறையை மையப்படுத்தி ரூ.100 கோடி ஊழல் நடந்துள்ளது. மதுபான ஆலைகளில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ஒரு பெரிய ஊழல் நடந்துள்ளது. எங்கேயும் தப்பித்து போக முடியாது. அமலாக்கத்துறை நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் . அவர் வகிக்கும் துறை மீண்டும் அமலாக்கத்துறையிடம் சிக்குகிறது.” என்று அண்ணாமலை கூறினார்.
“டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் அதன் தலைமை அலுவலகத்தை வரும் 17-ம் தேதி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அடுத்த ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடுவோம். தமிழக அரசு பதில் சொல்லும் வரை, அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும். அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்ததை வரவேற்கிறேன். இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.
“கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. கல்வியில் மாநில அரசுக்கு உள்ள உரிமை போல், மத்திய அரசுக்கும் உள்ளது. இவர்கள் இஷ்டத்திற்கு ஆட்சி நடத்துவதற்கு அரசியலமைப்பின்படி அவர்களுக்கு உரிமை இல்லை. அமைச்சர் தியாகராஜனின் மகன் இருமொழி படிக்கிறார். முதல்மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழி பிரெஞ்ச். இது தான் அவர்களின் இரு மொழிக் கொள்கை. ஒவ்வொரு அமைச்சரும் பொய் பேச ஆரம்பித்தால், அவர்களின் குழந்தைகள் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று புகைப்படம் எடுப்பது தான் எனது வேலையா அமைச்சர்கள் மக்களின் வரிப்பணத்தில் வாழ்கின்றனர். அவர்கள் வெளிப்படையாக பேச வேண்டும். நான் பேசவில்லை. தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுடன் அவர்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வெளியிடுகிறேன். பிறகு அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.