தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளது. பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் 2வது கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதிக்கு முன் திமுக அரசு அனுமதி கோரி விண்ணப்பிக்கத் தவறியதால், 900 மருத்துவ இடங்களை உருவாக்கும் வாய்ப்பையும், 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டும் வாய்ப்பையும் இழந்துவிட்டது, என்று பாஜக தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்துக்கு 15 புதிய மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளது.
இந்தநிலையில், 2023-இல் தேசிய மருத்துவ ஆணையம், பத்து லட்சம் போ் மக்கள் தொகைக்கு, 100 மருத்துவ இடங்கள் என்ற விதியை அறிமுகப்படுத்தியது. இதன்படி, தமிழகத்தில் மேலும் புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் வாய்ப்பு குறைந்தது.
இதையடுத்து, தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள், தேசிய மருத்துவ ஆணையத்தை வலியுறுத்தியதன் பேரில், இந்த புதிய விதி, 2025-க்கு பிறகே நடைமுறைக்கு வரும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது.
இருப்பினும், திமுக அரசு, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்காமல், முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டது.
தமிழகத்தில், மயிலாடுதுறை, திருப்பத்தூா், தென்காசி, பெரம்பலூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க விண்ணப்பிக்கப் போவதாக திமுக அரசு கூறியிருந்த நிலையில், அதற்கான குறித்த காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கத் திமுக அரசு தவறியதால், தற்போது, தமிழகத்தில் சுமார் 900 மருத்துவக் கல்வி இடங்கள் பறிபோயிருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கான காரணத்தை முதல்வா் தெளிவுபடுத்துவாரா”, என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“