பட்டியலினத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனை அன்ஃபிட் என டி.ஆர். பாலு பேசியதற்கு பொது இடத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அரசியலில் யார் அன்ஃபிட் என்று டி.ஆர். பாலுவால் கூற முடியுமா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் கேள்வி நேரத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாகவும், நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தி.மு.க. எம்.பி ஆ.ராசா குற்றச்சாட்டு வைத்தார். இது தொடர்பாக மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், டி.ஆர். பாலுவின் பேச்சுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பேசினார்.
இதற்கு டி.ஆர்.பாலு கடும் ஆட்சேபம் தெரிவித்து ஆவேசமாக பேசினார். டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு பா.ஜ.க எம்.பிக்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மக்களவையில் வெள்ளபாதிப்பு குறித்து தி.மு.க எம்.பி., டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார். இதனால், அவையில் நான் குறுக்கிட்டேன்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை, அன்ஃபிட் என்று அவர் தெரிவித்ததன் மூலம், தி.மு.க-வினரின் நிலையை உணர முடிகிறது சமூகநீதியில் தி.மு.க-விற்கு நம்பிக்கையில்லை. பட்டியலினத்தவர் எம்.பி, அமைச்சர் ஆவதை தி.மு.க விரும்பவில்லை என்பதையே டி.ஆர்.பாலுவின் பேச்சு காட்டுகிறது.” என்று கூறினார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பட்டியலினத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனை அன்ஃபிட் என டி.ஆர். பாலு பேசியதற்கு பொது இடத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அரசியலில் யார் அன்ஃபிட் என்று டி.ஆர். பாலுவால் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களிடம் பேசியதாவது: “அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்தவர்கள், சுதந்திரம் பெற்று 75 ஆன்டுகளாக இந்திய பேரரசில் யாருமே அமைச்சராக இல்லை. முதல்முதலாக எல். முருகனை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எம்.பி ஆக்கி மீன்வளத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்திருக்கிறார். அதனால், டி.ஆர். பாலு பொது இடத்தில் எல். முருகனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; நீங்கள் (டி.ஆர். பாலு) எல். முருகனைப் பற்றி தப்பா பேசவில்லை, அவருடைய சமுதாயத்தைப் பற்றி தப்பா பேசியுள்ளீர்கள். தமிழ்நாட்டில் இருக்கிற ஒட்டுமொத்த பட்டியல் இன சகோதர, சகோதரிகளைத் தப்பா பேசியிருக்கிறீர்கள். ஒட்டுமொத்த அருந்ததியர் சமுதாயத்தை தப்பா பேசியிருக்கிறீர்கள். எல். முருகனின் வாழ்க்கையைத் தப்பா பேசியிருக்கிறீர்கள். அவர் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதைத் தப்பா பேசியிருக்கிறீர்கள். இதில் எந்த காரணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்ன சமூகநீதி இருக்கிறது. தமிழகத்தில் 35 அமைச்சர்கள் இருக்கிறார்கள். பட்டியல் இனத்தில் இருந்து 3 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்கிறார்கள். உங்க சமூகநீதியில் 35 பேரில் 3 பேர் அமைச்சர். பா.ஜ.க-வில் மொத்தம் 78 அமைச்சர்களில் 12 பேர் பட்டியலின சகோதர, சகோதரிகள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். 8 பேர் பழங்குடியினர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். 78 பேர்களில் மொத்தம் 20 பேர் அமைச்சர்கள். அப்போது இது (தி.மு.கவுடையது) சமூக நீதியா? இது (பா.ஜ.க-வுடையது) சமூகநீதியா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “நாடாளுமன்றத்தில் ஒரு மூத்த உறுப்பினர் பேசும் பேச்சா இது? ஒரு அமைச்சர் தன்னுடைய துறை சார்ந்த கேள்விக்கு பதில் அளித்தார் என்றால், அவரைப் பார்த்து நீங்கள் இந்த மாதிரி கேவலமாக பேசுவீர்களா? அதனால், இது வாய்க்கொழுப்பு மட்டுமல்ல, ஆணவத்தின் உச்சம். இது ஆணவத்தின் உச்சம் மட்டுமல்ல. தோல்வியினுடைய அறிகுறி. அதனால், தமிழக சகோதர சகோதரிகள் இதையெல்லாம் நீங்கள் பார்த்திருக்க வேண்டும். தி.மு.க-வின் மூத்த தலைவர்களுக்கு எம்.பி.க்களுக்கு எந்த அளவுக்கு ஆணவம் இருக்கிறது பாருங்கள். அமைச்சரைப் பார்த்து அன்ஃபிட் என்கிறார். அரசியலில் ஃபிட், அன்ஃபிட் என என்ன இருக்கிறது. மக்கள் பார்த்து முடிவு பண்ணுவதுதான். படிக்காதவராக இருந்தால், கர்மவீரர் காமராஜரைப் பார்த்து நீங்கள் அன்ஃபிட் என்று சொல்வீர்களா? உங்களுக்கு அன்ஃபிட் என்பதற்கு இலக்கணம் என்ன? குறியீடு என்ன? உள்ளடக்கம் என்ன? ஃபிட், அன்ஃபிட்டுக்கு பதில் சொல்லுங்கள். இதற்கு கடுமையான கண்டனங்களை மட்டுமல்ல. இதனுடைய விளைவுகளை நிச்சயம் டி.ஆர். பாலு சந்திக்க வேண்டியிருக்கும். எங்களுடைய பா.ஜ.க தொண்டர்கள் டி.ஆர். பாலு எங்கே வந்தாலும் கருப்புக்கொடி காட்டுவார்கள். எங்கே போனாலும் விடமாட்டோம். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கிற வரைக்கும் டி.ஆர். பாலுவை விடமாட்டோம். எல். முருகனிடம் போனில் பேசினேன். ரொம்ப வருத்தப்பட்டு பேசினார்.” என்று அண்ணாமலை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.