அரசியலில் அண்ணாமலை ஒரு அறியாப்பிள்ளை, தமிழகத்தில் மதவாதம், ஜாதி அரசியலுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு தந்ததில்லை, என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார்.
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
கடந்த அக்டோபரில் பாஜகவுடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்ததில் இருந்து, கட்சிகளுக்கு இடையே அதிகரித்து வரும் விரோதம் மற்றும் குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அ.தி.மு.க., ஆதரவுக்காக வேறு கட்சிகளை தேடியது.
ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த- பாஜகவும் கவர்ந்திழுக்க முயன்ற- தேமுதிகவைத் தவிர, அதிமுக புதிய தமிழகம், மற்றும் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட மைனாரிட்டி கட்சிகளின் கூட்டணியை ஒன்றாக இணைத்துள்ளது. தேமுதிகவுக்கு 5 இடங்களையும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐக்கு தலா ஒரு இடத்தையும் ஒதுக்கிய அதிமுக 32 இடங்களில் நேரடியாக களம் காண்கிறது.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மற்றவர்களின் குறைகள், நிறைகளைப் பட்டியலிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் தேனி பங்களாமேடு பகுதியில் டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அண்ணாமலை, 2024 தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது, தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் வந்து விடுவார்கள். அதிமுகவில் காண்ட்ராக்ட் மற்றும் பணம் சம்பாதிப்பவர்கள் மட்டுமே கட்சி நடத்தி வருகிறார்கள். யார் இங்கு எட்டப்பன் என்று அதிமுக தொண்டர்கள் தெளிவாக உள்ளார்கள். தமிழக அரசியல் ஊழல், குடும்ப ஆட்சி பிரஷரில் உள்ளது. இந்தப் பிரஷரில் இருந்து மக்களை விடுவிக்க தினகரன் குக்கர் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.
இதற்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று (ஏப்.13) நடைபெற்ற அதிமுக தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, ஒரு கவுன்சிலராக முடியவில்லை. நீங்கள் வந்து அதிமுகவை ஒழிக்க முடியுமா? பதவி வரும் போது பணிவு வர வேண்டும். அது உங்களிடம் இல்லை. தலை கர்வத்தில் ஆடக் கூடாது. மரியாதை கொடுத்தால்தான் மனிதராக பிறந்தவருக்கு மரியாதை, என்று விமர்சித்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை அதீத கற்பனையில் பேசிக்கொண்டு இருக்கிறார். அரசியலில் அவர் அறியாப்பிள்ளை. இப்படி கற்பனையில் அவர் பேசிக்கொண்டு இருக்க நல்ல கதாசிரியராக செல்லலாம்.
எப்போதுமே மக்கள் தமிழகத்தில் மதவாதம், ஜாதி அரசியலுக்கு ஆதரவு கொடுத்தது இல்லை. டிடிவி தினகரன் மற்றும் பாஜக இடையே என்ன ரகசிய ஒப்பந்தம் உள்ளது என்று எனக்கு இன்னும்வரை தெரியவில்லை. பாஜக ஒரு மதவாத கட்சி அந்த கட்சிக்கு கொள்கையும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பைத் கொடுக்கவேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும், என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“