பாஜகவினர் மீதான தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்க இயக்குநரகம் மற்றும் மாநில காவல்துறை இணைந்து பி.எஃப். ஐ அமைப்பைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர். இந்தியா முழுவதிலும் 100 மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 11 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் இது இஸ்லாமிய அமைப்பினரிடம் கொந்தளிப்பு ஏற்படுத்தி தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பாஜக நிர்வாகிகள் உடமைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும், தமிழக டிஜிபிக்கும் கடிதம் எழுதுள்ளார் அண்ணாமலை. மேலும் அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் தேச பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் எல்லாம் பட்டியலிட்டு, வகுப்புவாத சக்திகளுக்கு துணை போகும் தமிழக அரசின் தவறான நிலைப்பாடுகள் எல்லாம் ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளதாக கூறியுள்ளார் அண்ணாமலை .
தமிழக அரசு நீதிக்குப் புறம்பாக செயல்படுவதையும், பாஜகவினருக்கு எதிராக காவல்துறையைப் பயன்படுத்துவதையும், அனுமதிக்க முடியாது. இந்த நடவடிக்கை இப்படியே தொடா்வதை பாஜகவும், மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று அக்கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.