பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த தலைவர்களுடன் சென்று ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து, தி.மு.க ஃபைல்ஸ் 2 என்று குறிப்பிடப்பட்ட ஒரு பெரிய டிரங்க் பெட்டியில் ஆவணங்களை அளித்து தி.மு.க-வினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தி.மு.க முதல் குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தி.மு.க தொடர்புடைய ஊழல் ஆவணங்கள் தி.மு.க ஃபைல்ஸ் 2 என்ற பெயரில் வெளியிடப்படும் என்று கூறினார்.
அண்மையில் அமலாக்கத்துறை தி.மு.க அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற பரபரப்பு ஓய்வதற்குள், அண்ணாமலை தி.மு.க ஃபைல்ஸ் 2 வெளியிட்டு, ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து அந்த ஆவணங்களை ஒப்படைத்துள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் சென்று ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தார். அப்போது, தி.மு.க ஃபைல்ஸ் 2 என்று குறிப்பிடப்பட்ட ஒரு பெரிய டிரங்க் பெட்டியை அளித்து தி.மு.க-வினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இன்று, தமிழ்நாடு பா.ஜ.க மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தோம்.
ஆளுநரிடம் தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, தி.மு.க ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ. 5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தி.மு.க பைல்ஸ் 2' என்ற பெயரில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “எல்நெட் டெக்னாலஜிஸ் நிறுவனம் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் கருவிகள் வாங்கியது, வருமான வரி ஏய்ப்பு, பினாமி நிறுவனங்கள் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து வினியோகத்தில் 600 கோடி ரூபாய் என மொத்தம் 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இது குறித்து தி.மு.க அரசு பதிலளிக்க வேண்டும்” என்றும் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.