தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை கன்னியாகுமரியில் என் மண் என் மககள் யாத்திரையை ஆக.15ஆம் தேதி தொடங்கினார்.
முன்னதாக ஆக.14ஆம் தேதி இரவே அவர் கன்னியாகுமரி வந்தார். தொடர்ந்து, அவர் கன்னியாகுமரிக்கு சென்று அண்ணல் காந்தியடிகள் நினைவிடம் மற்றும் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி உள்பட பாஜக தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் களியக்காவிளையில் முதல் நாள் பாதயாத்திரை நிகழ்வு நடந்தது. தமிழகம்- கேரளம் எல்லை பகுதியான களியக்காவிளை புனித அந்தோனியார் தேவாலயம் முன் பாஜகவினர் பெரும் திரளாக கூடியிருந்தனர்.
களியக்காவிளையில் புதிதாக ஒரு கம்பம் நாட்டப்பட்டு அதில் அண்ணாமலை தேசிய கொடியை ஏற்றி, பாத யாத்திரை தொடங்கும் முன் அங்கிருந்தவர்கள் அனைவரும் தேசிய "கீதம்"பாடி பயணத்தை தொடங்கினர்.
களியக்காவிளை ஒரு முக்கிய சந்திப்பு பகுதி என்பதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்தப் பாத யாத்திரை காரணமாக போக்குவரத்து ஒன்றும் நிறுத்தப்படவில்லை.
களியக்காவிளையில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குழித்துறை நோக்கி சென்ற பாதயாத்திரை குழுவினரும், அண்ணாமலை, பொன்னார், முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதமும் படந்தாலுமூடு பகுதியில் சாலை ஓர டீ கடையில் டீ அருந்தினார்கள்.
பாத யாத்திரையில் பங்கேற்றவர்கள் பாஜகவின் கட்சி கொடியை விட தேசிய கொடியை தான் அதிக எண்ணிக்கையில் பிடித்து சென்றனர்.
குழித்துறை பகுதியில் மதிய நேரத்தில் பொதுக் கூட்டத்துடன் நேற்றைய முதல் நிகழ்வு நிறைவடைந்தது.
தொடர்ந்து, இன்று சாமியார் மடத்தில் இருந்து பாத யாத்தியை அண்ணாமலை தொடங்குகிறார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“