மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் திமுக மற்றும் பாஜகவினர் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் அறிவுள்ளவர்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் பிடிஆர் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, பிடிஆரின் மகன்கள் எந்த கல்வி கற்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
எனது இரு மகன்களின் பெயர் பழனி மற்றும் வேல் என்பதுடன் அவர்கள் எல்.கே.ஜி முதல் பட்டப்படிப்பு வரையில் இருமொழி கொள்கையில் தான் பயின்று வந்துள்ளார்கள் என பிடிஆர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
ஆங்கிலம், பிரெஞ்ச் மொழி
அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம் இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ், இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? வெளங்கிடும்; தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?
அண்ணன் பி.டி.ஆர் அவர்களது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.