கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் தீயில் உடல் கருகி உயிரிழந்தார்.
கோவை உக்கடம் கார் தீ விபத்து குறித்த முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடித்து சிதறிய காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால், அந்த முகவரியில் யார் வசிக்கிறார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்த பகுதியில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், மாநகர காவல் ஆணையர் வெ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
கோவையில் கார் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்த இடத்தில் தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஜி.பி சைலேந்திர பாபு, “கோவையில் இன்று காலை நடந்த சம்பவம் குறித்த புலன்விசாரணை கோவை மாவட்ட காவல்துறை விசாரித்து வருகிறது. மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.
தடய அறிவியல் துறையைச் சேர்ந்த முழு குழுவினரும், விபத்து நிகழ்ந்த இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையின் இயக்குநரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தடயங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. கோவையில் இருக்கக்கூடிய வெடிகுண்டு நிபுணர் குழுவினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு கமாண்டோ பிரிவைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்களும் விமானத்தில் இங்கு வந்துள்ளனர். போலீஸ் மோப்ப நாய் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்துள்ளது. சிலிண்டர் எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். காரின் உரிமையாளர்கள் குறித்தும், இறந்த நபர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். விசாரணையின் முடிவில்தான் மற்ற விவரங்களை கூற முடியும். தற்போதைக்கு இந்த சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ உதவி தேவைப்படவில்லை. புலன்விசாரணையில் அதுபோன்று ஏதாவது தென்பட்டால்தான் அதுகுறித்து சொல்லப்படும்.” என்று சைலேந்திர பாபு கூறினார்.
மேலும், கார் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர் யார், விபத்து ஏற்பட்டது எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்ட சதியா என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக காவல்துறை 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பா.ஜக. மாநிலத் தலைவர் அண்ணமலை, கோவை கார் கேஸ் சிலிண்ட வெடி விபத்து பல சந்தேகங்களை எழுப்புகிறது, கோவை மக்களின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது.
பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை
தமிழ்நாடு பா.ஜ.க வரவேற்கிறது.
தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"