தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. புதன்கிழமை (17.04.2024) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. முன்னதாக, தமிழக அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அந்த வகையில், கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணமலை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தபோது, கூட்டத்தில் பெண் ஒருவர் நீட் தேர்வு குறித்து எழுப்பிய கேள்விக்கு, உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என்று கூறினார்.
கோவை தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை ஒன்றியப் பகுதியில் தமிழக பா.ஜ.க தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். சின்ன வதம்பச்சேரி கிராமத்தில் வாக்கு சேகரித்த அண்ணாமலையிடம் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் ஒருவர், நீட் தேர்வு பா.ஜ.க கொண்டுவந்தது என்று சொல்கிறார்கள், நீட் தேர்வால் நிறைய குழந்தைகள் இறந்துபோகிறார்கள், அப்படி இருக்க ஏன் அதைக் கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “எங்களுடைய உயிரே போனாலும் நீட்டை எடுக்க மாட்டோம், உயிரே போனாலும் நீட்டை எடுக்க மாட்டோம். நீட் ஏழை மக்களுக்கு நல்லது. முதல்முதலாக ஏழை மக்கள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போகிறார்கள். தி.மு.க 1967-ல் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தது 5 அரசு மருத்துவக் கல்லூரிகள், 17 தனியார் மருத்துவக் கல்லூரிகள், நாங்கள் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவந்திருக்கிறோம். எங்களுடைய நோக்கம் தேர்வு மூலமாக சமூகநீதியுடன் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போக வேண்டும். உயிரே போனாலும் நீட்டை மட்டும் எடுக்க மாட்டோம். அப்படி நீட்டை எடுத்துதான் நாங்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றால், அந்த மாதிரி அரசியலில் நாங்கள் இருக்கப்போவது கிடையாது. எல்லா மக்களும் நீட்டை ஏற்றுக்கொண்டார்கள். நீட் என்பது எங்களுடைய கொள்கை முழக்கம், கிராமப்புறத்தில், ஒரு ஏழைத் தாயினுடைய குழந்தை நீட் மூலமாகத்தான் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போக வேண்டும். இல்லாவிட்டால், எங்கே போவீர்கள், டி.ஆர். பாலுவின் தனியார் மருத்துவக் கல்லூரி, பாலாஜி மருத்துவக் கல்லூரி, ஸ்டாலினுடைய பினாமி, இப்படி ஒரு கோடி ரூபாய் எத்தனை பேர்களால் படிக்க முடியும் சொல்லுங்கள். பணம் இருக்கிறவர்கள் சொத்தை விற்று கொடுப்பார்கள். ஏழைத் தாயினுடைய மகன் நீட் மூலமாகத்தான் அரசுக் கல்லூரிக்கு போக முடியும். அதனால், நீட்டை எந்த காரணத்திற்காகவும் எடுக்க மாட்டோம்.” என்று கூறினார்.
அதற்கு அந்த பெண், நீட் தேர்வால் நிறைய குழந்தைகள் இறந்து போகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “எந்த குழந்தையும் இறக்கவில்லை, இறப்பதற்கு தூண்டுகிறார்கள். குழந்தை இறப்பதற்கு எஃப்.ஐ.ஆர் போட்டு ஸ்டாலினை உள்ளே வைத்தால், எந்த குழந்தையும் தற்கொலை செய்துகொள்ளாது. நான் காவல்துறையில் தமிழ்நாட்டில் இருந்திருந்தால், எஃப்.ஐ.ஆர் போட்டு முதல் குற்றவாளி ஸ்டாலினை உள்ளே தள்ளியிருப்பேன். அப்படி செய்யாததினால், ஒவ்வொரு குழந்தையும் தூண்டி, தூண்டி தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். அதனால், தவறு யார் மேல் என்று யோசியுங்கள். எங்கள் மேல் என்ன தவறு, நீங்கள் தரவுகளை எடுத்து பாருங்கள், 2016-க்குப் பிறகு, நீட் வந்த பிறகு, எத்தனை குழந்தைகள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போயிருக்கிறார்கள், பாம்பு பிடிக்கிறவர்களின் குழந்தை போயிருக்கிறார்கள். மங்கையர்க்கரசி என்று மதுரைக்கு பக்கத்தில் தினமும் பூ விற்கிறவர்களின் குழந்தை போயிருக்கிறார்கள். இப்படி எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் என்னால் கொடுக்க முடியும்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.