தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களின் பேரன், பேத்திகள் பயிலும் பள்ளியில் மும்மொழி பின்பற்றப்படும் போது, அரசு பள்ளிகளில் மும்மொழிகள் இருக்கக் கூடாதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, "மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் தான் கல்வி நிதி விடுவிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காத பட்சத்தில் ரூ. 2 ஆயிரம் கோடியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது" என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். குறிப்பாக, "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
'மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது' என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!" என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை எதிர்வினையாற்றியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன், பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?
தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சி.பி.எஸ்.இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும் தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?
தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960-களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.