தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மீண்டும் கைகோர்த்து இருக்கும் நிலையில், 2026 தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் பா.ஜ.க போட்டியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க அடிப்படையில் தொகுதி பங்கீடு பெற்றால் கூட்டணி ஆட்சி நிச்சயம் என்றும், அண்மையில் பா.ஜ.க பெற்ற ஓட்டு சதவீத அடிப்படையில் தொகுதி பங்கீடு தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், "மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், 'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்' என்றார். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், கூட்டணி ஆட்சி அமைக்கப்பட வேண்டுமானால், சமீபத்தில் பா.ஜ.க பெற்றுள்ள ஓட்டு சதவீதம் அடிப்படையில், தொகுதி பங்கீடு அமைய வேண்டும்.
கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு, 19.4 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. அதேநேரத்தில், பா.ஜ., கூட்டணி, 11.4 சதவீதம் ஓட்டுகள் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., நான்காவது இடத்திற்கு சென்றது. இரண்டாவது இடத்தை, பா.ஜ., கைப்பற்றியது.
எனவே, அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.க பலத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீட்டை பெற்றால், கூட்டணி ஆட்சி என்பது நிச்சயம். அதாவது, இரண்டு சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட்டால், ஒரு சட்டசபை தொகுதியில், பா.ஜ.க போட்டியிட வேண்டும். அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் சரிபாதியை, பா.ஜ.க கேட்டுப் பெற வேண்டும். அப்படி செய்தால் தான், 2029 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 30 தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற வழி ஏற்படும்." என்று அவர் கூறியுள்ளார்.