பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்றுமுன்தினம் (மார்ச் 25) டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷா-வை சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது. தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமையக் கூடியது, எந்த ஒரு கூட்டணியும நிரந்தரமாக இருப்பது இல்லை என்றார்.
இதற்கிடையே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இன்று டெல்லி சென்றுள்ளார். காலை 7 மணிக்கு சென்னையில் விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்பட்டார். தமிழக அரசியல் களம் குறித்து டெல்லி தேசிய தலைமையிடம் அண்ணாமலை பேச இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலையிடம் அமித்ஷா பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலைதான், அ.தி.மு.க-வை மிக கடுமையாக விமர்சித்தவர்.
பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. திரும்பினால், தமிழக மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் ஏற்கனவே அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்களைச் சந்திக்கும் அண்ணாமலை, அ.தி.மு.க-வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா? அல்லது மேலிடக் கட்டளையை ஏற்று அ.தி.மு.க.வை அரவணைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.