அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தி.மு.க அரசைக் கண்டித்து இன்று (டிச.27) காலை 10 மணியளவில் கோவை நேரு நகரில் உள்ள தனது வீட்டின் முன் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தன்னை தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார். அப்போது உடனிருந்து பா.ஜ.க நிர்வாகிகள் 'வெற்றி வேல், வீர வேல்' என கோஷம் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நாங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் வரும் நாட்களில் இன்னும் தீவிரப்படுத்த உள்ளோம். தனிமனிதனைச் சார்ந்தோ அல்லது தனிமனிதனுக்கு ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் கோபத்தைக் காட்டவோ இந்த போராட்டம் கிடையாது.
/indian-express-tamil/media/media_files/2024/12/27/KRsiT0KKQDtuXB9Zw6yZ.jpeg)
கண் முன்னால் அடுத்த தலைமுறை அழித்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம். கல்வியின் தரம் கீழே வர ஆரம்பித்து இருக்கிறது. போராக இருந்தாலும் கூட ஒரு பெண்ணின் மீது கை வைக்க கூடாது என்பது மண்ணின் மரபு. வரும் காலங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்த போகிறோம்.
ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடுக்க கூடிய குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
எதற்காக ஆறு சாட்டை அடி? காரணம் இருக்கிறது. முருகப் பெருமானிடம் எங்களுடைய வேண்டுதலை ஆறு சாட்டை அடியாக சமர்ப்பிக்கிறோம். விரதம் இருக்கப் போகிறோம். அரசியல் பணியை செய்ய போகிறோம். ஆண்டவனிடம் முறையிட போகிறோம்.
எல்லா மேடைகளில் தி.மு.க வை தோலுரித்து காட்ட போகிறோம். 3 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னாடி கொண்டு சென்று உள்ளனர். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காக்கி உடையின் மீதுதான் என் கோபம்.
இந்த பாலியல் நிகழ்வு பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.நன்றாக யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். திமுக ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணியை நான் அணிய மாட்டேன். அணியப் போவதில்லை. இது ஒரு வேள்வியாக தமிழக மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்கிறேன் என்று அண்ணாமலை கூறினார்.