தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டும் அல்ல. பொதுமக்களின் விருப்பமும் கூட.
அதனை நிறைவேற்றிட தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வகுத்துள்ளது.
இது குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்பிப்பதாக நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் தலைமையிலான ஐவர் குழுவானது தங்களை சந்தித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தினை தங்களிடம் சமர்பிக்குமாறு அறிவுறுத்தி உள்ளேன்.
ஆகவே தாங்கள் ஜூலை 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி, அல்லது இம்மாதத்தில் ஏதாவது ஒருநாள் தங்களின் பொன்னான நேரத்தினை இந்தச் சந்திப்புக்கு ஒதுக்கி தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தங்களின் மேலான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“