விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அறிவித்தார். தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் அ.தி.மு.க-வுக்கு திடீர் அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உதயநிதி கருத்து
இந்நிலையில், இது தொடர்பாக சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி, "சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஆய்வுக்கூட்டத்தின் அறிக்கைகள் தயார் செய்யப்பட்ட பிறகு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்து அவர்களின் தனிப்பட்ட விருப்பம்." என்று தெரிவித்தார்.
ஜெயக்குமார் கருத்து
இதனிடையே, மது ஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுத்திருப்பது பற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், மது என்பது சமுதாயத்துக்கு மிகப்பெரிய கேடு. குறிப்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பூரண மது விலக்கு கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கையில் பதாகையுடன் பூரண மது விலக்கு வேண்டும் என்று வீட்டு முன்பு கோஷமிட்டு போராடினார். இதை அனைவரும் அறிவார்கள்.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாபாரம் ஆகாத 500 மதுக்கடையை மூடிவிட்டு அதற்கு பதிலாக எப்.எல்.2 லைசென்சு,1,500 கடைகளுக்கும், 3 ஆயிரம் மனமகிழ் மன்றங்களுக்கும் லைசென்சு கொடுத்து விட்டு அதற்கு பிறகு ரூ.35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.42 ஆயிரம் கோடியாக மதுக்கடை வருமானத்தை உயர்த்தி விட்டு, குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.
அது தோழமையில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இப்போது பிடிக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் முதலில் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார். குரல் கொடுத்தது மட்டுமின்றி ஒரு நல்ல விசயத்துக்காக அவர் மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு நல்ல நோக்கத்துக்காக நடைபெறும் மாநாடு என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.
அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் பேராதரவு பெற்றுள்ள இயக்கம் அ.தி.மு.க. என்பதால் அந்த அடிப்படையில் இன்று அழைப்பு கொடுத்துள்ளார். இதில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“