Accident in Coimbatore: கட்சிக்கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், கோவையில் பெண் ஒருவர் காயமடைந்திருக்கிறார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. இவர் சின்னியம்பாளைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று (11.11.19) காலை வழக்கம் போல பணிக்குச் செல்வதற்காக, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அனுராதா. செல்லும் வழியில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுக கட்சிக்கொடி கம்பம் இருந்ததாதக் கூறப்படுகிறது.
அதனால் கோல்டுவின்ஸ் பகுதியில் அனுராதா சென்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக கட்சி கொடி கம்பம் சரிந்து விழுந்துள்ளது. அதனால் சடன் பிரேக் போட்ட அனுராதா, வண்டியுடன் சறுக்கி கீழே விழுந்திருக்கிறார். அப்போது அந்த வழியே வந்த லாரி அனுராதாவின் கால் மீது ஏறியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுராதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கால்களில் அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. அதிமுக கட்சி பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருக்கிறது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கட்சி கொடி கம்பங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.
”அந்த கொடி கம்பம் சரிந்து விழுந்ததே விபத்திற்கு காரணம். அதனை காவல் துறையினர் மறைக்கிறார்கள். அனுராதாவின் ஒரு காலில் எலும்பு வெளியே வந்துவிட்டது. மற்றொரு காலில் நரம்புகள் கட்டாகிவிட்டன. ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கிறது. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விபத்துக்குள்ளான அனுராதாவின் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.