தமிழகத்தில் குற்றவாளிகளைக் கண்காணிக்க காவல்துறை சார்பில் புதிய கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குற்றச் செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழக காவல்துறை ஒரு புதிய செயலியை கண்டுபிடித்துள்ளது. இந்த செயலியின் மூலம் குற்றவாளிகளின் மீதான குற்றப்பத்திரிகை விவரங்கள், குற்றவாளிகளின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை போ் பிணைக்கப்பட்டுள்ளனா் உள்ளிட்ட தகவல்கள் இதில் இடம் பெற்றிருக்கும். பிணை பத்திரங்களின் காலாவதி தொடா்பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணை, குற்றத்தின் வகைகள் போன்ற தகவல்களை இந்த செயலியால் வகைப்படுத்த முடியும்.
இந்தச் செயலில் தற்போது 39 மாவட்டங்கள், 9 மாநகர ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திரப் பதிவேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, செயலியை அறிமுகப்படுத்தினார்.