பேரறிஞர் அண்ணா 50வது நினைவு தினம் : இந்தி-இந்து-இந்துஸ்தான் என்று ஒற்றை நாடு, ஒரே மொழி என்ற கொள்கை வேரூண்டத் தொடங்கிய நாளில் தமிழுக்கென தனிச்சிறப்புமிக்க இடத்தை வாங்கிக் கொடுத்து தமிழ் நெஞ்சங்களில் எங்கும் நீங்காத புகழ் படைத்தவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா 50வது நினைவு தினம்
தேசிய கட்சிகள் ஏதும் இல்லாமல் பிராந்திய கட்சியின் ஆட்சியை தமிழகத்தில் வித்திட்டவர் பேரறிஞர் அண்ணா. இன்று அவரின் 50 வது நினைவு தினம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கு மகனாக பிறந்தவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மேற்கல்வி கற்றவர் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். பின்பு பத்திரிக்கைத் துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கட்ட ஆரம்பித்தார்.
பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக்கட்சியில் இணைந்து சமூக பங்களிப்பை இந்த மாநிலத்திற்கு அளித்தார். தமிழும் ஆங்கிலத்திலும் சிறப்பாக சொற்பொழிவாற்றும் திறன் கொண்ட அண்ணாவின் பேச்சுக்கு மயங்கி கழகத்தில் இணைந்தவர்கள் எத்தனையோ பேர் என்றாலும் மிகையாது.
இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டத்தின் விளைவாக மக்கள் மத்தியில் நிரந்தர தலைவராக உருவெடுத்தார் அறிஞர் அண்ணா. 1967ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. மும்மொழி கல்விக் கொள்கையை முடக்கி இரு மொழிக் கல்வியை அறிமுகப்படுத்தினார். சுயமரியாதை திருமணங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. அதே வருடம் ஏப்ரல் 16ல் மெட்ராஸ் மாகாணம் தமிழ் நாடு என்றானது.
தன்னுடைய ஆட்சிக்காலம் என்னவோ வெறும் 2 வருடங்கள் தான். ஆனாலும் இந்த சமூகத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து தமிழக மக்களின் நினைவில் என்றும் நீங்காத பெரும் அறிஞராக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அண்ணா புற்று நோய் காரணமாக இந்த உலகை விட்டு மறைந்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணியாக சென்று, அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் மு.க.ஸ்டாலின். திமுக உறுப்பினர்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.