தமிழக- கேரள எல்லைப் பகுதியான பெரியார் புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வனப்பகுதியில் புகுந்து தேனி மாவட்டம் கம்பம் நகரில் புகுந்தது.
கம்பம் நகருக்குள் புகுந்து தெருக்களில் உலா வந்தது. தெருக்களில் நடந்தும், ஓடியும் சுற்றித் திரிந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அவ்வாறு யானை ஓடும்போது அந்த வழியாக சென்ற அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து பீதியடைந்த மக்கள் யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர். கம்பம் நகரில் இருந்து இடம் பெயர்ந்த அரிக்கொம்பன் யானை சுருளிப்பட்டி வழியாக மலையடிவார பகுதிக்கு சென்றது. யானையை பிடிக்க கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
இதே போல் 3 கும்கி யானைகள், யானைகளின் குணாதிசயங்களை நன்கு அறிந்த முதுமலையைச் சேர்ந்த பழங்குடியினர் சிறப்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் யானை இருந்தது. யானை ஊருக்குள் வராமல் கண்காணிப்பில் வைத்தனர்.
இதையடுத்து மயக்கி ஊசி செலுத்தி யானையை பிடிக்க கால்நடை மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். இதற்காக தக்க நேரத்தையும் எதிர்பார்த்து காத்திருந்தனர். யானை பகல் நேரங்களில் சுருளிப்பட்டி பகுதியில் இருந்து நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி வழியாக சண்முகாநதி அணை பகுதியில் உணவு அருந்தியும் தண்ணீர் குடித்தும் உலா வந்தது. இரவில் சின்னஓவுலாபுரம் பகுதியிலும் தங்கி வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு சின்னஓவுலாபுரம் பகுதிக்கு யானை வந்தது. இது சமதளமான பகுதி என்பதால், கால்நடை மருத்துவர்கள் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதையடுத்து கம்பத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கும்கி யானைகளும் அங்கு வரவழைக்கப்பட்டன. அரை மயக்கத்தில் இருந்த அரிக்கொம்பன் யானையை, நேற்று அதிகாலை கும்கி யானை, வனத்துறையினர் உதவியுடன் வனத்துறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனமான பிரத்யேக லாரியில் ஏற்றப்பட்டது.
இதையடுத்து யானையை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.
மக்கள் எதிர்ப்பு
தேனியில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிக்கொம்பன் யானையை மணிமுத்தாறு வனப்பகுதியில் விட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரிக்கொம்பன் யானை நேற்று மாலை 5.20 மணி அளவில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வன சோதனை சாவடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் இப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றும், மாஞ்சோலை தோட்டம் உள்ளது என்றும் மற்றும் சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது என்றும் கூறி யானையை அப்பகுதியில் விட எதிர்ப்பு தெரிவிததனர். யானையை வேறு முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
இதன்பின் கிட்டதிட்ட 1 வாரத்திற்கு மேலாக தேனி மக்களை அலறவிட்ட அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் முண்டன்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மேல கோதையாறு பகுதியில் வனத்துறையினரால் பாதுகாப்பாக விடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“