நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வன சோதனை சாவடி பகுதிக்கு ஜூன் 5ஆம் தேதி அரிக்கொம்பன் யானை கொண்டு வரப்பட்டது.
அந்தப் பகுதிக்கு மேல் அரிக்கொம்பன் யானை பயணித்த வாகனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
உடன் வந்த வனத்துறை வாகனங்கள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. வனத்துறையினரே அனுமதிக்கப்படாத நிலையில், பத்திரிகையாளர்கள் அரிக்கொம்பன் பயணிக்கும் வாகனத்தை தொடர்ந்து செல்ல முயன்ற நிலையில், வனத்துறையினருக்கும், பத்திரிகையாளர்கள் இடையே சிறிது நேரம் வாக்கு வாதமும் ஏற்பட்டது.
நிலைமை இப்படி இருக்க அரிக்கொம்பன் யானையை அந்த காட்டு பகுதியில் இறக்கி விடுவதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சோதனைச்சாவடியின் முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறை கைது செய்தனர். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் முத்துகுழியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டதால் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து, மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜாவிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக கேட்டபோது, “அரிக்கொம்பன் யானையை களக்காடு முண்டந்துறை வனவிலங்கு சரணாலயப் பகுதியில் விடக்கூடாது என அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அந்தப் பகுதியில் காணியின பழங்குடி மக்களின் 48 குடியிருப்புகள் மற்றும் அரசு ரப்பர் கழக குடியிருப்புகளும் உள்ளன. எனவே அரிக்கொம்பன் யானையை கேரள வனப்பகுதியில் விட வேண்டும் எனத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிலைகளில் பொது மக்களின் அரிக்கொம்பன் யானை பற்றிய அச்சம் சூழலை குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இது தொடர்பாக மேலும் விசாரிக்கையில், “அரிக்கொம்பன் யானை விடப்பட்ட முத்துகுளி வனப்பகுதியில் யானையின் நடமாட்டம் பற்றி கண்காணிக்க வனத்துறை உயர் அதிகாரிகள் குழுவுடன், மருத்துவ குழுவினரும் தேவையான மருந்துகள் உடன் தயார் நிலையில் உள்ளனர்.
இவர்கள் இன்னும் சில நாள்கள் முத்துக்குளி பகுதியில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்” எனத் தெரியவந்தது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“